2 முறை கால் செய்த சவுதி இளவரசர்.. மௌன ராகம் பாடும் டிரம்ப்.. செங்கடலில் ஆட்டம் காட்டும் ஹவுதி படை!
ஈரான் ராணுவ படைகள் ஹார்முஸ் வழித்தடத்தை முற்றுகையிட்டு பெர்சியன் வளைகுடாவை ஆட்சி செய்து வரும் வேளையில், செங்கடலை ஈரானின் ஆதரவு படைகளான ஹவுதிக்கள் ஆட்சி செய்ய திட்டம்போட்டு உள்ளது.
கடந்த 2 வாரங்களாக சவதி அரேபியாவின் கச்சா எண்ணெய் தளங்களையும், எண்ணெய் கப்பல்களையும், இதர முக்கிய உள்கட்டமைப்புகளையும் குறிவைத்து தாக்கி வந்த ஹவுதி படைகள் மீது அமெரிக்காவை தாக்குதல் நடத்தி அடக்குமாறு சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் டிரம்ப்-க்கு 2 முறை போன் கால் செய்துள்ளார்.

ஆனால் டிரம்ப் அழைப்பை ஏற்கவில்லை, இதேவேளையில் அமெரிக்க அதிகாரிகள் முகமது பின் சல்மான்-க்கு ஹவுதிக்கள் மீது தாக்குதல் நடத்தவும், ஹவுதிக்கள் விவகாரத்தில் தலையிடவும் எவ்விதமான திட்டமும் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக யெமன் நாட்டின் துறைமுக நகரமான மோக்கா-வை மொத்தமாக கைப்பற்றியுள்ளது ஹவுதி படைகள். இந்த துறைமுகம் செங்கடலில் வழித்தடத்தின் நுழைவு வாயிலாக இருக்கும் பாப் அல் மண்டெப் அருகில் இருக்கும் காரணத்தால் அவ்வழியாக வரும் கப்பல்களை ஹவுதி படைகள் எளிதாக தாக்க முடியும்.
செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் சர்வதேச கடல் போக்குவரத்தை இணைக்கும் பகுதி தான் பாப் அல் மண்டெப் வழித்தடம். யெமன் நாட்டில் ஏற்கனவே சனா நகரின் பெரும் பகுதி ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் வேளையில் தற்போது மோக்கா துறைமுக நகரத்தையும் கைப்பற்றியுள்ளது.
இதனால் சூயல் கால்வாய் வாயிலாக செங்கடலை கடந்து சர்வதேச கடலை எட்டும் அனைத்து கப்பல்களுக்கும் ரிஸ்க் அதிகமாகியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை 109 டாலருக்கும் அதிகமாக உயர்ந்தது தற்போது ஒட்டுமொத்த வர்த்தக சந்தையும் பாதிக்கப்பட்டு உள்ளது, சவுதி இளவரசரின் கோரிக்கையை டிரம்ப் ஏற்காத நிலையில் இரு நாடுகள் மத்தியில் விரிசல் ஏற்படலாம்.
இதுமட்டும் அல்லாமல் ஈரானுக்கு இந்த சம்பவம் ஜாக்பாட் ஆக மாறியிருக்கிறது, காரணம் அமெரிக்கா- ஐரோப்பா – ஆசிய சந்தையை இணைக்கும் மொத்த வழித்தடத்தையும் தற்போது ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு கொண்ட ஹவுதி கட்டுப்பாட்டிற்குள் வரும் காரணத்தால் தனது நிபந்தனைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ளும் வாய்ப்பை பெற்றுள்ளது.
சவுதி அரேபியா – ஹவுதி படைகள் மத்தியிலான தாக்குதல்கள் ஜூலை மாதம் முதல் அதிகரித்து வந்தது, அப்போது ஹவுதி படைகளை அழிக்க டிரம்ப் உதவி செய்வதாக சவுதி அரேபியாவிடம் கூறியது, ஆனால் சவுதி அரசு யெமன் நாட்டில் இருக்கும் தனது கூட்டணி அமைப்புகளுடன் ஹவுதிகளை அடக்கியது.
ஆனால் கடந்த 2 வாரமாக ஹவுதிக்கள் நேரடியாக சவுதி அரேபியாவில் தாக்குதல் தீவிரமாக நடத்த துவங்கியது. இதனால் வளைகுடாவில் பதற்றம் அதிகரித்தது, ஹவுதிக்களின் தாக்குதல் அதிகரித்த நிலையில் சவுதி தொடர்ந்து அமெரிக்காவின் உதவிகளை கேட்டு வந்தது. ஆனால் அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு டிரம்ப் ஈரான் மற்றும் ஹார்முஸ் வழித்தடத்தில் மட்டும் கவனம் செலுத்த கூறியதாக சவுதி அரேபியாவுக்கு விளக்கம் கொடுத்துள்ளது.

