International
oi-Prasanna Venkatesh
அமெரிக்காவும் ஈரானும் இடையே கிட்டத்தட்ட 4 மாதமாகங்களாக நிலவி வரும் மோதலுக்கு முடிவு கட்டும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே 14 முக்கிய விதிகளுடன் அமைதி ஒப்பந்தம் உருவாகியுள்ளது. இந்த ஒப்பந்தம், ஈரானுக்கு பெரிய அளவிலான நிவாரணங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மத்திய கிழக்கு பகுதியில் நீண்டகால அமைதி ஏற்பட வாய்ப்புள்ளது.
இது மட்டும் அல்லாமல் இந்த ஒப்பந்தம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால் ஈரான் மீண்டும் உலக நாடுகள் உடன் எவ்விதமான தடையும், நெருக்கடியும் இல்லாமல் சுதந்திரமாக வர்த்தகம் செய்ய முடியும். காரணம் மேற்கத்திய நாடுகளின் தடைகள் முழுமையாக நீக்கப்பட உள்ளது என்பது தான் இதற்கு பின்னால் இருக்கும் காரணம்.

14 விதிகளுடன் அமைதி ஒப்பந்தம்
அமெரிக்கா – ஈரான் இடையே விவாதிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தில் மொத்தம் 14 முக்கிய விதிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுல்ளது. இந்த விதிகள், முந்தைய ஒப்பந்த முயற்சிகளை விட ஈரானுக்கு சாதகமாக அமைந்துள்ளன. இதற்கான காரணம் டிரம்ப் அரசுக்கு தற்போது போரை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த 14 புள்ளிகள் அடங்கிய அமைதி ஒப்பந்தத்தில் ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகள் நீக்கப்படுவது, ஈரானின் முடக்கப்பட்ட நிதிகள் விடுவிக்கப்படுவது மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் விதிக்கப்பட்ட கடற்படை முடக்கம் நீக்கப்படுவது ஆகியவை முக்கியமாக இடம்பெற்றுள்ளன.
இந்த நடவடிக்கைகள் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வர உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானுக்கு பெரிய நிவாரணம்
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஈரானுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடாக 300 பில்லியன் டாலர் மதிப்பிலான மறுசீரமைப்பு திட்டங்களை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் முன்வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஈரானின் 24 பில்லியன் டாலர் முடக்கப்பட்ட சொத்துக்களில் 12 பில்லியன் டாலர் உடனடியாக விடுவிக்கப்படும் என்றும், மீதமுள்ள தொகை 60 நாட்கள் பேச்சுவார்த்தை காலத்தில் விடுவிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிதி உதவி, ஈரானின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முக்கிய பங்கு வகிக்கும்.
லெபனான் நாட்டுக்கு விடிவுகாலம்
லெபனான் உள்ளிட்ட அனைத்து முனைகளிலும் போர் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்படும். இதன்மூலம் மத்திய கிழக்கு பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் பதற்றம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்றும், அந்த நாட்டின் இறையாண்மையை முழுமையாக மதிப்போம் என்றும் அமெரிக்கா உறுதியளிக்கும் என கூறப்படுகிறது. ஒப்பந்தம் நடைமுறைக்கு வருகிறதா என்பதை கண்காணிக்க தனித்த மேற்பார்வை அமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இறுதி அமைதி ஒப்பந்தத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் (UN Security Council) தீர்மானம் மூலம் சர்வதேச அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு
ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக, ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா விதித்த கடற்படை முடக்கம் 30 நாட்களுக்குள் முழுமையாக நீக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஈரான் ஏற்பாடுகளின்படி இந்த நீரிணை 30 நாட்களுக்குள் மீண்டும் திறக்கப்படும்.
இந்த நடவடிக்கை உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தை மீட்டெடுக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அமெரிக்க படைகள் ஈரானைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து விலக்கிக் கொள்ளவும் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது.
இறுதி பேச்சுவார்த்தைக்கான நிபந்தனைகள்
இந்த ஒப்பந்தத்தின்படி, 60 நாட்கள் பேச்சுவார்த்தை காலத்தில் ஈரானின் அணு திட்டம் தொடர்பான இறுதி ஒப்பந்தம் எட்டப்படும். இந்த காலகட்டத்தில் அமெரிக்கா புதிய தடைகளை விதிக்காது என்றும், புதிய படைகளை அனுப்பாது என்றும் உறுதியளித்துள்ளது.
மேலும், ஈரான் தனது அணு ஆயுத உற்பத்தி செய்யாது என்ற நிபந்தனையை உறுதிப்படுத்தும். இறுதி ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் தீர்மானத்தின் மூலம் அங்கீகரிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தால், மத்திய கிழக்கு பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் பதற்றம் குறையும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். ஈரானின் ஏவுகணை திட்டம் மற்றும் எதிர்ப்பு குழுக்களுக்கு ஆதரவு போன்ற விஷயங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறாததால், இரு தரப்பும் சில சலுகைகளை வழங்கியுள்ளன என்று பார்க்கப்படுகிறது.



