Last Updated:
125 Days work | வேலைக்கு வருபவர்களின் வருகை ‘பயோமெட்ரிக்’ முறையில் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம், விபி ஜி ராம்ஜி சட்டம் எனும் வளர்ச்சியடைந்த இந்தியா, வேலைவாய்ப்பு உறுதியளிப்பு மற்றும் வாழ்வாதார இயக்கம் என இன்று முதல் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசு நாடு முழுவதும் கிராமப் புற வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் அதாவது 100 நாள் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வந்தது. இந்த திட்டத்துக்கு மாற்றாக ‘விபி-ஜி ராம் ஜி’ என்ற புதிய திட்டத்தை கொண்டு வந்து இருக்கிறது. இதன்மூலம் 125 நாள் வேலை கிடைக்கும்.
இந்த திட்டம் நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) அமலுக்கு வருகிறது. தமிழகத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் ‘வளர்ச்சியடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம்’ என்ற பெயரில் அமல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், 125 நாட்களாக உயர்வு இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வந்த வேலை உத்தரவாதம் 100 நாட்களில் இருந்து 125 நாட்களாக உயர்த்தப்பட்டு உள்ளது. வேலை கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு 15 நாட்களுக்குள் வேலையும், சம்பளமும் வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு வேலை வழங்காவிட்டால், வேலையிழப்பு உதவித் தொகை வழங்கப்படும். முதல் 30 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட தினக்கூலியின் குறைந்தபட்சம் நான்கில் ஒரு பங்கும், அதன்பிறகு அறிவிக்கப்பட்ட கூலியின் குறைந்தபட்சம் பாதியும் வேலை இழப்பு உதவித்தொகையாக வழங்கப்படும். மத்திய அரசின் நிதியுதவியில் செயல்படுத்தப்படும் திட்டமான இதில் 60 சதவிகித நிதியை மத்திய அரசும், 40 சதவிகித நிதியை மாநில அரசும் வழங்கும் என தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


