இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தக் கார்களின் மதிப்பு சுமார் 100 மில்லியனிலிருந்து மிக ஆடம்பரமான மாடல்கள் 500 மில்லியன் ரூபாய் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை மற்றும் மோதல்கள் காரணமாக, உலக வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) மூடப்பட்டுள்ளது.
இதனால் உலகளாவிய கப்பல் போக்குவரத்து மற்றும் வர்த்தகம் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ள வேளையில், மதிப்புமிக்க சரக்குகளைக் கையாள்வதற்கான ஒரு மாற்றுப் போக்குவரத்துப் புள்ளியாக இலங்கை உருவெடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட 14 ‘லம்போகினி’ (Lamborghini) சொகுசு கார்கள், இலங்கை வழியாகப் புதிய பாதையில் கொண்டு செல்லப்படுகின்றன.
இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த 14 ஆடம்பர கார்களும் கடல் வழியாக இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டள்ளன.
அங்கிருந்து, அவை ஏழு 40 அடி நீளமுள்ள கொள்கலன்களில் ஏற்றப்பட்டு, கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து, ஒரு பெரிய சரக்கு விமானம் மூலம் டுபாய் மற்றும் கட்டாரின் டோஹா ஆகிய நகரங்களுக்கு இவை கொண்டு செல்லப்பட உள்ளன.
இந்தச் சரக்குப் போக்குவரத்தைக் கையாளும் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவிக்கையில், பாரம்பரிய வழித்தடங்கள் பிராந்திய பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில், இத்தகைய மாற்று வழித்தடங்கள் இலங்கையின் தளவாடத் துறைக்கு பெரும் பொருளாதார நன்மைகளைத் தரக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள இந்தக் கார்களின் மதிப்பு சுமார் 100 மில்லியனிலிருந்து மிக ஆடம்பரமான மாடல்கள் 500 மில்லியன் ரூபாய் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கார்கள் சில நாட்களுக்கு முன்பு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தன. இந்த வாகனங்களை ஏற்றிச் செல்லும் விமானம், நாளை வெள்ளிக்கிழமை (21) காலை கட்டுநாயக்கவிலிருந்து புறப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.



