Last Updated:
ஹர்திக் பாண்ட்யா – சிவம் துபே இணை இங்கிலாந்து பவுலிங்கை அடித்து நொறுக்கியதால் ஸ்கோர் எகிறியது. இருவரும் 6 ஆவது விக்கெட்டிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்
புனேவில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டு தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 2 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 1 போட்டியிலும் வென்றுள்ளன.
இந்நிலையில் 4 ஆவது டி20 புனேவில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டன. ஷமிக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கும், துருவ் ஜுரெலுக்கு பதிலாக ரின்கு சிங், வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக சிவம் துபே ஆகியோர் விளையாடுகின்றனர்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு தொடக்கமே பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. இங்கிலாந்து பவுலர் சகிப் மஹ்மூத் வீசிய 2 ஆவது ஓவரில் சஞ்சு சாம்சன், திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 12 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதன்பின்னர் அபிசேக் சர்மா – ரின்கு சிங் இணை அணியை சரிவிலிருந்து மீட்டது. அபிசேக் 29 ரன்னும், ரின்கு சிங் 30 ரன்களும் எடுத்தனர். இதன்பின்னர் இணைந்த ஹர்திக் பாண்ட்யா – சிவம் துபே இணை இங்கிலாந்து பவுலிங்கை அடித்து நொறுக்கியதால் ஸ்கோர் எகிறியது.
இருவரும் 6 ஆவது விக்கெட்டிற்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 30 பந்துகளில் தலா 4 பவுண்டரி சிக்சருடன் ஹர்திக் பாண்ட்யா 53 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். தொடர்ந்து வேகமாக ரன்கள் சேர்த்த சிவம் துபே 34 பந்துகளில் 2 சிக்சர் 7 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
இதையும் படிங்க – IND vs ENG T20 : இந்திய அணியில் 3 முக்கிய மாற்றங்கள்.. தொடரை கைப்பற்ற புதுவியூகம்
20 ஓவர்கள் முடிவில்9 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 181 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
January 31, 2025 8:50 PM IST


