Last Updated:
விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது வேளாண் கோரிக்கைகள் மற்றும் குறைகளை அதிகாரிகளிடம் நேரடியாக மனு அளித்து தீர்வு பெறலாம்.
விழுப்புரம் வருவாய் கோட்ட அளவிலான ஜூலை மாத விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் கோட்ட நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட விவசாயிகளின் வேளாண் சார்ந்த கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றுக்கு உரிய தீர்வு காணும் நோக்கில், மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் எதிர்வரும் 14.07.2026 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது.
விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் (தாலுகா) அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ள இக்கூட்டத்திற்கு, வருவாய் கோட்டாட்சியர் (RDO) தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார். இக்கூட்டத்தில் விழுப்புரம் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் ஆகிய ஐந்து வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயப் பிரதிநிதிகள் மற்றும் கிராம அளவிலான விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாம் என கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. விவசாயம் தொடர்பான பொதுப் பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட கோரிக்கைகள் குறித்த மனுக்களை இந்தக் கூட்டத்தில் நேரடியாக அதிகாரிகளிடம் வழங்கி பயன்பெறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
விவசாயிகள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, கூட்டுறவு, மின்சாரம், வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை (நீர்நிலை ஆதாரங்கள்) உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசுத் துறைகளின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
எனவே, மேற்கண்ட ஐந்து வட்டங்களைச் சேர்ந்த தாலுகா மற்றும் கிராம அளவிலான அனைத்து விவசாயப் பிரதிநிதிகளும், விவசாயிகளும் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களது பகுதி விவசாயம் சார்ந்த பொதுப் பிரச்சினைகள் மற்றும் தனிநபர் கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


