வீட்டு ஓனர்களுக்கு செக்.. டெபாசிட் பணத்தை இனி இதற்கெல்லாம் குறைக்க கூடாது.. நீதிமன்றம் அதிரடி!
வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒவ்வொரு குடும்பமும், வீட்டை காலி செய்யும் போது வீட்டு ஓனர்களிடம் எதிர்கொள்ளும் பிரச்சனை வீட்டிற்கு குடியேறும் போது கொடுக்கப்பட்ட டெபாசிட் தொகையை முழுமையாக பெற்ற முடியாமல் தவிப்பது தான்.
வீட்டு ஓனர்கள் ஒவ்வொரு ஸ்விட்ச், பல்பு, பெயின்ட், சுத்தம் செய்ய என சின்ன சின்ன விஷயத்திற்கும் டெபாசிட் பணத்தை குறைத்து எஞ்சிய சில ஆயிரங்களை மட்டுமே கொடுக்கின்றனர். இந்த பணத்தை வாங்க நடையாய் நடக்க வேண்டும் என்பது அடுத்த பெரிய கதை.
ஆனால் இந்திய சட்டமும், சமீபத்தில் வீட்டு ஓனர் மற்றும் வாடகைதாரர் மத்தியிலான வழக்கில் நீதிமன்ற கொடுத்த தீரப்புகள் பல முக்கியமான விஷயங்களை கூறுகிறது.

ஒரு வீட்டை காலி செய்யும் போது சுவறில் பெயிண்ட் மங்கியிருப்பது, சுத்தம் செய்வது போன்றவற்றுக்கு வீட்டு ஓனர்கள் பணத்தை பிடிக்க கூடாது. இவை அனைத்தும் வீட்டை பயன்படுத்தும் போது இயற்கையாக நடக்கும் ஒரு wear and tear விஷயம், இதற்கு வீட்டின் உரிமையாளர் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என நீதிமன்ற தீர்ப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Transfer of Property Act, 1882 பிரிவு 108(m) விதி என்ன சொல்கிறது என்றால் வாடகை வீட்டில் குடியிருப்போர் வீட்டை நல்ல முறையில் மெயின்டெயின் செய்ய வேண்டும், வீட்டை காலி செய்யும் போது வீடு எப்படி இருந்ததோ அதேபோல் திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால் இதில் இயற்கையாக வீட்டை பயன்படுத்தும் போது ஏற்படும் மாற்றங்களுக்கு (Wear and Tear) விலக்கு உள்ளது என கூறுகிறது.
இதனால் வீட்டிற்கு வெள்ளை அடிப்பது, பெயிண்ட் அடிப்பது போன்ற அடிப்படை விஷயங்களை வீட்டின் உரிமையாளர்கள் தான் ஏற்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இதேபோல் வீட்டு ஓனர்கள் பெயிண்ட் அடிப்பதற்காக, சிறு சிராய்வு போன்ற விஷயங்களுக்கு டெபாசிட் பணத்தை குறைக்க கூடாது.
சரி எப்போதெல்லாம் டெபாசிட் பணத்தை குறைக்கலாம்?
கதவுகள், ஜன்னல்கள், பைப், ஸ்விட்ச் போன்றவை உடைந்திருந்தால் டெபசிட் பணத்தை குறைக்கலாம், சுவரில் பெரிய ஓட்டை, சுவரில் பாதிப்பு போன்றவை இருந்தால் பணத்தை குறைக்கலாம்.
வீட்டில் குடியிருப்பவர்களின் கவன குறைவால் வீட்டில் இருக்கும் அமைப்புகளில் பாதிப்பு ஏதேனும் ஏற்பட்டால் கட்டாயம் அதற்கு பணம் வசூலிக்கலாம், வீட்டில் இருப்பவர்களில் செயலால் வீட்டின் உரிமையாளர்களுக்கு பெரும் செலவு ஏற்பட்டால் இதற்கான தொகையும் வசூலிக்கலாம்.
அப்படி பணத்தை குறைக்கும் போது பாதிப்பிற்கான ஆவணங்கள், செலவு செய்ததிற்கான பில் மற்றும் இதர ஆதாரங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் இந்த விதியில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதனால் இனி வீட்டு உரிமையாளர்களும் சரி, வீட்டில் குடியிருப்பவர்களும் சரி தங்களுடைய உரிமையை புரிந்துக்கொண்டு செயல்பட்டால் வீட்டை காலி செய்யும் போது இத்தகைய பிரச்சனைகள் வராது. அப்படி வந்தாலும் சட்டம் உங்களுக்கு துணை நிற்கும்.

