Tamilnadu
oi-Vishnupriya R
காரைக்குடி: காரைக்குடி அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பிரபு முன்னிலையில் மாணவர்களை TVK TVK TVk என கோஷம் போட வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றது முதல் மக்கள் பிரதிநிதிகளாக அல்லாதோரும் அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் அலப்பறை செய்து வருகிறார்கள்.

இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் யாரும் இது போல் ஆய்வுக்குச் செல்லக் கூடாது என அமைச்சரும் கட்சியின் பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியிருந்தார்.
ஆனாலும் யாரும் அதை கேட்டபாடில்லை. தற்போது மக்கள் பிரதிநிதிகளான தவெக எம்எல்ஏக்கள், அமைச்சர்களும் அலப்பறை செய்து வருகிறார்கள். அந்த வகையில் காரைக்குடியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு கனிமவளத் துறை அமைச்சர் பிரபு சென்றார்.
அப்போது அங்கு மாணவர்கள் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு அவர் வரும் போது TVK TVK TVK என கட்சியினர் கோஷமிடச் சொல்லி அவர்களும் கோஷமிட, அதை கண்டிக்காத பிரபு, ரசித்தபடியே நடந்து வந்து கொண்டிருந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் ப்ளூசட்டை மாறன் தனது கண்டனத்தில் கூறியிருப்பதாவது: அரசுப்பள்ளிகளில் இதுபோன்று இனி நடக்காது என உறுதியளித்த ராஜ்மோகன் இப்போது என்ன பதில் வைத்துள்ளார்?
தனியார் பள்ளிகளில் இதை செய்வீர்களா? இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ப்ளூ சட்டை மாறன் ட்வீட்டிற்கும் பலரும் நீதிமன்றம் தலையிட்டு இதற்கு தீர்வு சொன்னால்தான் உண்டு என்கிறார்கள். அண்மையில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, ஒரு அரசு பள்ளிக்கு போய் அங்கு மாணவியிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட போது அதற்கு அவர் பதிலளிக்க தெரியாத நிலையில் அந்த மாணவியின் தயக்கத்தை ரீல்ஸ்ஸாக எடுத்து போட்டு “பர்ஸ்ட் பெஞ்சில் இருக்கும் மாணவிக்கே இங்லீஷ் தெரியலையே கடைசி பெஞ்ச் மாணவிகள் எப்படி இருப்பார்கள்” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதையடுத்து சம்பந்தமே இல்லாமல் தொழில்துறை அமைச்சருக்கு பள்ளிக் கூடத்தில் என்ன வேலை என்ற கேள்வி எழுந்தது. அது போல் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் விஜய் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் என்ற பெயரில் தவெக நிர்வாகிகள் சிலர் நுழைந்து விஜய் படத்தை காட்டி இவர் யார் என்றெல்லாம் கேட்டு படிப்புக்கு இடையூறு செய்தனர். பிறகு இதற்கு கண்டனம் எழுந்ததை அடுத்து அந்த நபர் தவெகவில் இருந்து நீக்கப்பட்டார்.

அது போல் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒன்றில் மக்கள் பிரதிநிதி இல்லாத ஒருவர் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வந்தார். இதற்கு கண்டனம் எழுந்த நிலையில் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
பள்ளியில் இந்த தவெகவினர் அலப்பறைகள் நிறைய நடந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பள்ளிகளில் யாரும் ஆய்வு என்ற பெயரில் மாணவர்களுக்கு இடையூறு செய்யக் கூடாது என விஜய் உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அடுத்த நாளே விஜய் பேச்சு காற்றோடு போச்சு!

