ஆந்திரா என்றால் ஓகே.. தமிழ்நாடுக்கு நோ.. தடம் மாறுகிறது மாபெரும் நாகப்பட்டினம் திட்டம்!
சென்னை பரந்தூர் விமான நிலையம் முதல் கோயம்புத்தூர் கிரிக்கெட் ஸ்டேடியம் வரையில் தமிழ்நாடு அரசு பல திட்டங்களை மாறு ஆய்வு செய்யும் பணியில் திட்டங்களை முடக்கி வைத்திருக்கிறது. இதேவேளையில் மத்திய அரசும் தமிழ்நாட்டில் செயல்படுத்த திட்டமிட்டு இருந்த சில முக்கிய திட்டங்களை மறுஆய்வு செய்து பெரும் முதலீட்டை, சிறிய முதலீடாக மாற்றியுள்ளது. ஆனால் ஆந்திராவில் திட்டமிட்டப்படி முழு திட்டத்தையும் மத்திய அரசு நிறுவனங்கள் செயல்படுத்துகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான இந்தியன் ஆயில் நாகப்பட்டினத்தில் சுமார் 33000 கோடி ரூபாய் மதிப்பிலான கிரீன்பீல்டு சுத்திகரிப்பு ஆலையை அமைக்க திட்டமிட்டு இதற்காக 2021 ஜனவரி மாதமே ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தற்போது இத்திட்டம் குறித்து மறு ஆய்வு செய்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் உள்நிர்வாக மதிப்பீட்டின் படி பொருளாதார ரீதியாக பார்க்கும் போது ஒரு முழு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுவது மூலம் முதலீட்டுக்கு ஏற்ற லாபம் கிடைக்காது என கூறுகிறது.
இதனால் நாகப்பட்டினம் திட்டத்தை ஒரு முழு பெட்ரோ கெமிக்கல் ஆலையாக அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2021 திட்டத்தின் படி நாகப்பட்டினத்தில் 9 மில்லியன் டன் அளவிலான வருடாந்திர சுத்திகரிப்பு திறன் கொண்ட ஆலையை 29,361 கோடி ரூபாய்க்கு அமைக்க திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்தை இந்தியன் ஆயில், சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் தலா 25 சதவீத பங்குகள், இத்திட்டத்திற்காக நிதியுதவி செய்யும் நிறுவனங்களுக்கு 50 சதவீதம் என்ற அடிப்படையில் திட்டமிடப்பட்டது. இதை தொடர்ந்து மார்ச் 2024ல் இந்தியன் ஆயில் 75 சதவீத பங்குகளுடனும், சென்னை பெட்ரோலியம் கார்ப் 25 சதவீத பங்குகள் உடன் இத்திட்டத்தை 33,023 கோடி ரூபாய்க்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டது.
இத்திட்டத்திற்கான நீலம் ஏற்கனவே இருக்கும் வேளையில், இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் நிதி உதவியை மத்திய அரசியம் இந்தியன் ஆயில் கோரியிருந்தது. ஆனால் இதற்காக நிதியுதவியை அளிக்க மத்திய அரசு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
இத்திட்டத்தை மீண்டும் மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு குறைவான முதலீடு, நிலையான லாபம் கிடைக்கும் ஒரு பெட்ரோகெமிக்கல் ஆலையாக அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோகெமிக்கல் பிரிவு என்பது ஒரு சுத்திகரிப்பு ஆலையில் ஒரு சிறு பகுதியாக மட்டுமே இருக்கும்.
இந்தியாவில் தற்போது எரிபொருள் தேவையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு இருக்கும் வேளையில் நீண்ட கால அடிப்படையில் ஒரு சுத்திகரிப்பு ஆலை அமைப்பது என்பது லாபகரமானதாக இருக்காது என்பதே தற்போதைய முக்கிய வாதமாக உள்ளது.
சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் போது பொதுவாகவே மத்திய மாநில அரசுகளின் நிதியுதவி, வரி சலுகைகள், நிலம் தொடர்பான உதவிகளின் அடிப்படையில் தான் செயல்படுத்தப்படுகிறது. தற்போது முதலீட்டுக்கான நிதி கிடைக்காத நீண்ட கால அடிப்படையில் நிலையான லாபம் தரும் பெட்ரோகெமிக்கல் அலையை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
ஆனால் பாரத் பெட்ரோலியம் 9-11 மில்லியன் டன் அளவிலான வருடாந்திர சுத்திகரிப்பு ஆலையை ஆந்திராவில் அமைக்கும் பணியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதில் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல் என இரண்டும் கொண்டுவரப்படுகிறது. இத்திட்டத்திற்காக ஆந்திர அரசு பெரும் சலுகையை அறிவித்துள்ளது, சுமார் 1 லட்சம் கோடி ரூபாயில் முதலீடு செய்யப்படும் இத்திட்டத்தில் சவுதி அரேபியாவில் மாபெரும் சுத்திகரிப்பு ஆலை நிறுவனமான சவுதி ஆராம்கோ இணைய உள்ளது.
இதேபோல் ஹிந்துஸ்தான் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் சுத்திகரிப்பு ஆலை + பெட்ரோகெமிக்கல் ஆலையை அமைத்தது கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.

