பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில், “பொறுப்புகளில் இருந்து தப்பி ஓடுவது ஒரு தலைவருக்கான தகுதி இல்லை” எனத் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய கருத்து அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த பேச்சு தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாகத் தாக்குவது போல் உள்ளதாகக் கூறி அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் விஜய் சேதுபதியைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். இருப்பினும், இது நிகழ்ச்சி தொடர்பான கருத்து மட்டுமே தவிர, வேறு யாரையும் குறிப்பிட்டது அல்ல என விஜய் டிவி தரப்பில் உடனடியாக விளக்கமளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் மோகன் ஜி, விஜய் சேதுபதி ஒரு திமுக ஆதரவாளர் என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். ஒரு தனியார் நிகழ்ச்சியை வைரலாக்குவதற்காகத் தமிழக அரசியல் தலைவர்களைப் பயன்படுத்துவது தவறானது என்றும், கருத்து கூற விரும்பினால் நேரடியாகப் பெயர் குறிப்பிட்டே பேசியிருக்க வேண்டும் என்றும் அவர் சாடினார். மேலும், எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் அரசை கடுமையாக விமர்சித்த விஜய் சேதுபதி, முந்தைய திமுக ஆட்சியில் அரசு விழாவில் பங்கேற்று ஆட்சியைப் புகழ்ந்து பேசியதன் மூலம் அவர் திமுகவைச் சேர்ந்தவர் என்பது மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாகிவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


