Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: வாஷிங்டன் சுந்தர் தங்கள் அணியில் இடம்பெற வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மண் இருவரும் மோதி கொண்டது தெரிய வந்துள்ளது. இறுதியாக வாஷிங்டன் சுந்தரை கொடுக்க முடியாது என்பதில் விவிஎஸ் லக்ஷ்மண் பிடிவாதமாக இருந்துள்ளார்.
இந்திய அணி அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. மறுபக்கம் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளது. செப்டம்பர் 27 முதல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரும், செப்டம்பர் 28 முதல் ஆசிய விளையாட்டு போட்டிகளும் தொடங்க உள்ளன.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான தொடர்களுக்கு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செயல்பட உள்ளார். ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மண் செயல்பட உள்ளார். ஏற்கனவே இரு தொடர்களுக்குமான இந்திய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. கடைசி நேரத்தில் நிதிஷ் குமார் ரெட்டியை மட்டும் கம்பீர் தனது அணிக்கு கேட்டு வாங்கி இருக்கிறார்.
இந்த மாற்றம் செய்யப்படுவதற்கு முன் கவுதம் கம்பீர் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண் இருவரும் மோதலில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதற்கு காரணம் ஆஃப் ஸ்பின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் தான். வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகளவிலான இடதுகை பேட்ஸ்மேன்கள் இருப்பதால், ஆஃப் ஸ்பின்னர் கட்டாயம் தேவை என்று கம்பீர் பிடிவாதமாக இருந்திருக்கிறார்.
மறுபக்கம் விவிஎஸ் லக்ஷ்மண், நேபாளம் உள்ளிட்ட அணிகளில் இடதுகை பேட்ஸ்மேன்கள் அதிகம் இருக்கின்றனர். அதனால் கட்டாயமாக ஆஃப் ஸ்பின்னர் தனக்கு அவசியம் என்று கூறியுள்ளார். இறுதியாக விவிஎஸ் லக்ஷ்மண் தனது அணியில் இருந்த நிதிஷ் ரெட்டியை கொடுக்க முன் வந்ததால், பிரச்சனை சுமூகமாக முடிவுக்கு வந்திருக்கிறது.
இதன் மூலமாக பிசிசிஐ நிர்வாகத்திற்கு மறைமுகமாக ஒரு தகவலும் சொல்லப்பட்டிருக்கிறது. இடதுகை ஸ்பின் ஆல்ரவுண்டர்கள் இந்திய அணியில் அதிகமாக இருக்கின்றனர். ஆனால் வாஷிங்டன் சுந்தரின் இடத்திற்கு போட்டியே இல்லாமல் இருக்கிறது. இதனால் ஆஃப் ஸ்பின்னர்களை உருவாக்கும் வேலையில் பிசிசிஐ ஈடுபட வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.

