
யாழ்ப்பாணம், மானிப்பாய் வீதியில் போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கிளை வழிமறித்தபோது 26 வயது இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர், பொலிஸார் வழிமறித்த வேளையில் திடீரெனக் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம், யாழ்ப்பாணம் – காரைநகர் வீதியில், மானிப்பாய் தேவாலயத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது.
சுன்னாகம் சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது, அங்கு கடமையிலிருந்த போக்குவரத்துப் பொலிஸார் அவரை நிறுத்துமாறு சைகை செய்துள்ளனர். அதையடுத்து மோட்டார் சைக்கிளை வீதியோரமாக நிறுத்திய இளைஞன், திடீரென நிலத்தில் சரிந்து விழுந்து அசைவற்ற நிலைக்குச் சென்றுள்ளார்.
உடனடியாக அவர் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இளைஞரின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

