கோலாலம்பூர்:
2025-ஆம் மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரி பாரங்களை (Tax Return Form) சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை மே 15-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக உள்நாட்டு வருமான வரி வாரியம் (IRB / LHDN) அறிவித்துள்ளது.
முன்னதாக, வணிகம் செய்யாத தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் எஸ்டேட்கள் வரி தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஏப்ரல் 30-ஆக (நாளை) நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது மின்னணு தாக்கல் (e-Filing) முறையைப் பயன்படுத்துபவர்களுக்குக் கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வரி தாக்கல் செய்வோர்களில் MyTax போர்டல் அல்லது IRB அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக e-Filing மூலம் மட்டுமே இந்த நீட்டிப்பு பொருந்தும்.
எனவே கடைசி நேரத் தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் இணைய நெரிசலைத் தவிர்க்க, மே 15-ஆம் தேதி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே வரி தாக்கல் செய்யுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வருமானச் சான்றிதழ்கள் (EA Form), ரசீதுகள் மற்றும் பிற ஆவணங்களைச் சரிபார்த்து, தகவல்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்யுமாறும் உள்நாட்டு வருமான வரி வாரியம் அறிவுறுத்தியுள்ளது,
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வரி தாக்கல் செய்யத் தவறினால், 1967-ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தின் கீழ் அபராதம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என IRB எச்சரித்துள்ளது.
வரி செலுத்துவோர் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், IRB இணையதளத்தில் உள்ள விளக்கக் குறிப்புகளைப் பார்க்கலாம் அல்லது MyTax போர்டல் வாயிலாகத் தெளிவு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.




