Last Updated:
இந்தோ மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள ஜோகாம்தார் வழியாக மியான்மரிலிருந்து இந்தியாவிற்கு சிகரெட்டுகள் கடத்தப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
வெளிநாட்டு சிகரெட் கடத்தலுக்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம், நாட்டின் வடகிழக்குப் பகுதியில் பல்வேறு ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மே மாதம் நடத்திய சோதனைகளின் மூலம் வடகிழக்குப் பகுதியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 71 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ.14 கோடியாகும். இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 11-ம் தேதியன்று மிசோரம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு வணிக முத்திரை கொண்ட 45 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு வகை சிகரெட்டுகளை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் பறிமுதல் செய்தது. இந்த சோதனை நடவடிக்கைகள் அசாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தோ மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள ஜோகாம்தார் வழியாக மியான்மரிலிருந்து இந்தியாவிற்கு சிகரெட்டுகள் கடத்தப்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், கடந்த சில வாரங்களில் நடத்தப்பட்ட தொடர் சோதனை நடவடிக்கைகளில் 26 லட்சம் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Jun 12, 2026 10:35 PM IST

