வங்கி கணக்கில் இருந்த ரூ.759 கோடி! முதியோர் உதவித்தொகை வாங்க சென்றவருக்கு அதிர்ச்சி! எப்படி வந்தது?
திடீரென வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் வந்து விழுந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? அப்படி ஒரு சம்பவம் உண்மையிலேயே பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது. முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக சென்றவரின் வங்கிக் கணக்கில் எதிர்பாராத விதமாக கோடிக்கணக்கான ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. இந்த கட்டுரையில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்ப்போம்.
பீகார் மாநிலத்தின் முசாபர்பூரைச் சேர்ந்தவர் 82 வயதான காமேஸ்வர் மிஸ்ரா. அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது கிராமத்தில் இருக்கும் பொது சேவை மையத்திற்கு முதியோர் பணத்தை எடுக்கச் சென்றுள்ளார். முதலில் அவருடைய அக்கவுண்டில் பணத்தை எடுத்துவிட்டு, பின்னர் அவருடைய மகனின் அக்கவுண்டில் இருக்கும் பணத்தையும் எடுக்க முடிவு செய்தார்.
அதற்காக அங்கிருந்த ஊழியர்கள் முதியவரின் கணக்கில் எவ்வளவு இருக்கிறது என்பதை பார்த்துள்ளனர். அப்போது லேப்டாப்பில் காட்டிய தொகை முதியவரை மட்டுமல்ல அங்கிருந்த ஊழியர்களையும் திக்குமுக்காட வைத்தது. ஏனெனில் அவர் அக்கவுண்டில் இருந்த மொத்த பேலன்ஸ் ரூ. 759,69,51,951759. தோராயமாக ரூ. 759 கோடி.

முதியவர் மட்டுமல்ல அவருடைய மகனின் அக்கவுண்டிலும் அதேபோல ஒரு தொகை வரவு வைக்கப்பட்டிருந்தது. இதை பார்த்த பொது சேவை மைய ஊழியர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில் 2 அக்கவுண்டில் இருந்த மொத்த தொகையையும் கூட்டி பார்த்தால் ரூ.1500 கோடி வரும்.
உடனே அந்த முதியவர் இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக வங்கி கிளையை அணுகியுள்ளார். ஊழியர்கள் சாப்ட்வேரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்று கூறியுள்ளனர். ஆனால் இதுவரையில் முதியவரிடம் அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் நடப்பது இது புதிதல்ல. இதற்கு முன்பும் சிலர் தங்களுடைய அக்கவுண்டில் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவிலான தொகை வரவு வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இப்படிப்பட்ட சம்பவங்கள் நடந்தால் உடனடியாக வங்கி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு இனிவரும் காலத்தில் டிஜிட்டல் சேவைகள் இன்னும் பாதுகாப்பானதாக மாறும்.மேலும் மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் இது போன்ற அதிக தொகை வரவு வைக்கப்பட்டது போல காண்பித்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக புகார் அளிப்பது நல்லது!
