
பொலிஸாரால் சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்த சிறிய லொறி மீது, உரம் ஏற்றி வந்த பாரிய லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்; மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகப் பூனாவைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பூனாவையில் ஏ-9 வீதியின் கல்கந்தேகம பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் நோர்ச்சோலை, இலந்தடியாவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான வர்ணகுலசூரிய அன்டன் விராஜ் பெர்னாண்டோ (வயது46) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ரமேஷ் பிரியங்கர (வயது 35) ஆகியோர் ஆவர்.
இலந்தடியாவைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனது ஊழியர்களுடன் யாழ்ப்பாணத்தில் கடல் அட்டை பிடிக்கும் தொழிலுக்காகச் சென்று கொண்டிருந்தபோது, பூனாவைப் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து, போக்குவரத்துப் பிரிவு பொலிஸாரால் அவர்களது லொறி சோதனைக்காக நிறுத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், அதே திசையில் பின்னால் வந்த உரம் ஏற்றி வந்த லொறி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய லொறி மீது கவிழ்ந்தே இந்தத் துரதிர்ஷ்டவசமான விபத்து நிகழ்ந்ததாகப் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
விபத்து இடம்பெற்றபோது, நிறுத்தப்பட்டிருந்த சிறிய லொறியில் எட்டு பேர் இருந்துள்ளனர். பாரிய லொறி அந்தச் சிறிய வாகனத்தின் மீது கவிழ்ந்ததில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். எனினும், சிறிய லொறியின் உரிமையாளரான வர்த்தகர், பொலிஸ் அதிகாரிகளிடம் தனது வாகன ஆவணங்களைக் காண்பிப்பதற்காக வாகனத்திலிருந்து கீழே இறங்கியிருந்ததால், அவர் காயங்களின்றி உயிர் தப்பினார்.
சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதே இந்த விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விபத்து குறித்து பூனாவைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

