ரூ.50,000 கோடி ரெடி..!! புது ஸ்கெட்ச் போடும் முதலமைச்சர் விஜய்..!! மக்களே எல்லாமே வீடு தேடி வரப் போகுது!!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தனது தொலைநோக்கு திட்டமான வெற்றி தமிழகம் விஷன் (Vetri Thamizhagam Vision) என்ற திட்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசு சேவைகள் ஆகியவற்றை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் மேம்படுத்துவது தொடர்பான பல தொலைநோக்கு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
விஜய் அரசு, தொழில் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் “தமிழ்நாடு வியூக முதலீட்டு ஆணையத்தை” ( Tamil Nadu Strategic Investment Authority-TNSIA) உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. இதன்படி அரசு 50,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலீட்டு ஆணையத்தை அமைக்க உள்ளதாம். இந்த நிதி செமி கண்டக்டர், மின்சார வாகனங்கள் , விண்வெளி ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட உற்பத்தி துறைகளில் நேரடியாக முதலீடு செய்ய பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளது.

வெறும் தனியார் முதலீடுகளை ஊக்குவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அரசு தொழில் நிறுவனங்களுடன் இணைந்து முதலீடு செய்து, அதன் உரிமையை பகிர்ந்து கொள்ளும் வகையில் இந்த தனி ஆணையமே உருவாக்கப்பட உள்ளது. இது தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், அரசுக்கு வரியல்லாத வருவாயையும் ஈட்டித் தரும் என சொல்லப்படுகிறது.
அடுத்ததாக மாநிலத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, முதன்முறையாக பிரத்யேகமான ஏஐ நகரம் அமைக்கப்பட உள்ளது. சென்னைக்கு அருகிலேயே இதற்கான இடம் தேர்வு செய்யப்படும் என்றும் அனைத்து மாவட்டங்களிலும் இதன் கிளைகளாக சிறு சிறு ஏஐ நகரங்கள் உருவாக்கப்படும் என சொல்லப்படுகிறது.
விஜய் அரசு, நலத்திட்டங்களை மக்கள் எளிதாக பெறும் வகையில், விண்ணப்பம் தேவையில்லாத (No-application) நலத்திட்ட விநியோக முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் மக்கள் எந்த ஒரு திட்டத்திற்கும் சென்று விண்ணப்பம் செய்ய தேவையில்லை. ஆதார், ரேஷன் உள்ளிட்ட தகவல்களின் அடிப்படையில் தானியங்கி முறையில் அரசு நலத்திட்டங்கள் நேரடியாகவே மக்களை சென்றடையும். மேலும், Right to Service Act மூலம் அனைத்து அரசு சேவைகளும் குறிப்பிட்ட காலத்திற்குள் கிடைப்பதை அரசு உறுதி செய்யும் என அந்த தொலைநோக்கு திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைநோக்கு திட்டத்தின் கவனிக்கதக்க அம்சமே மாவட்ட அளவிலான வளர்ச்சி பணிகளில் 10 சதவீத நிதியை எங்கு செலவிட வேண்டும் என்பதை பொதுமக்களே முடிவு செய்யும் People’s Choice Budget என்ற புதிய முயற்சி முன்னெடுக்கப்பட உள்ளது. அதாவது தங்கள் பகுதியில் என்னென்ன திட்டங்களை செய்ய வேண்டும் என்பதை மக்களே தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
உலகின் முதல் 100 பல்கலைகழகங்களில் மேற்படிப்பு பயில விரும்பும் மாணவர்களுக்கு அரசே கல்வி செலவுகளை ஏற்கும் அதற்கு பதிலாக படிப்பை முடித்துவிட்டு அவர்கள் தாயகம் வந்து சொந்த மாநிலத்திற்கு சிறிது காலம் வேலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.
இந்த தொலைநோக்கு திட்ட அறிக்கையானது அரசின் சிறப்பு திட்ட அமலாக்க துறையால் தயாரிக்கப்பட்டுள்ளது.விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை முதலமைச்சர் விஜயே அறிவிப்பார் என சொல்லப்படுகிறது. மொத்த 436 திட்டங்கள் இதில் இடம்பெற்றுள்ளது என்றும் ஒவ்வொன்றும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர்கள் தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
