கைது செய்யப்பட்ட பெண், பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் சட்டப் பட்டப்படிப்பு பயின்று வருவதாகவும், அதற்கான கல்விச் செலவுகளைச் சமாளிக்கும் நோக்கிலேயே, இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரும், அவரது கணவரும் 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மாதம்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு வடக்கு பிராந்திய புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, இந்தத் தம்பதியினர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சோதனையின் போது, சந்தேகநபரான ஆணிடமிருந்து 1 கிலோ 6 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், பெண்ணிடமிருந்து 149 கிராம் 150 மில்லிகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த சந்தை பெறுமதி 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருப்பதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும் நடத்தப்பட்ட விசாரணைகளில், இந்த தம்பதியினர் ‘மொதர மயூர’ என அழைக்கப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்கள் என்பதும், நீண்டகாலமாக போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட பெண், பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் சட்டப் பட்டப்படிப்பு பயின்று வருவதாகவும், அதற்கான கல்விச் செலவுகளைச் சமாளிக்கும் நோக்கிலேயே, இந்தச் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளைத் தொடர்ந்து, குறித்த பெண், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சந்தேகநபரான கணவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவை நிறைவடைந்த பின்னர் அவரும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

