Last Updated:
ரயில்வே விதிமீறல் அபராதம் உயர்வு: ரயில்வே பாதுகாப்புப் படைக்கு வசூலிக்கும் அதிகாரம். ஜூன் 20 முதல் அமல்.
நீதிமன்றங்களின் வழக்கு சுமையைக் குறைக்கும் வகையில் ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் விதிமீறல்களில் ஈடுபடும் நபர்களிடம் உடனுக்குடன் அபராதம் வசூலிக்க ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ரயில்வே செயல்பாடுகளை வலிமைப்படுத்தவும், பயணிகளின் ஒழுக்கத்தை மேம்படுத்துவும் வகையில், ரயில்வே சட்டம் 1989-இன் படி, பல விதிகள் திருத்தப்பட்டுள்ளன.அதன்படி, ரயில்களில் மகளிர் பெட்டிகளில் ஆண்கள் பயணித்தால் 500 ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அது தற்போது 2,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
உரிய டிக்கெட் இல்லாமல் பயணிப்போருக்கான அபராதத் தொகை 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் அனுமதியின்றி விற்பனை செய்தால் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற விதி மீறலில் ஈடுபடுவோரிடம் உடனுக்குடன் அபராதம் வசூலிக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விதிமீறலில் ஈடுபடுவோர் ரயில்வே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகி அபராதம் செலுத்தும் நிலை இருந்து வந்தது. தற்போது அபராதம் செலுத்த மறுத்தால் மட்டும், நீதிமன்றம் வாயிலாக 5 ஆயிரம் வரை அபராதம் செலுத்தும் வகையில் விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த புதிய விதிமுறைகள் ஜூன் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில் பாலக்காடு கோட்டத்தில் 3 லட்சத்து 13 ஆயிரம் ரூபாயும், திருவனந்தபுரம் கோட்டத்தில் 7 லட்சம் ரூபாயும் வசூலிக்கப்பட்டது. முன்னதாக, ரயில்வே நீதிமன்றங்களில் வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையில் 30 சதவீதத்தை மாநில அரசும், 50 சதவீதத்தை ரயில்வேயும் பெற்று வந்தன. தற்போது ரயில்வே பாதுகாப்புப் படை மூலம் அபராதம் வசூலிக்கத் தொடங்கியுள்ளதால், முழுத் தொகையையும் ரயில்வே நிர்வாகத்திற்கே செல்ல உள்ளது….


