Last Updated:
கர்நாடகாவில் யானைக்கு அருகில் செல்பி எடுத்த பசுவராஜ் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கர்நாடகாவில் யானைக்கு அருகில் நின்று செல்பி எடுத்த நபருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த பசுவராஜ் என்பவர் பந்திப்பூர் வனவிலங்கு சரணாலயம் வழியாகச் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் வாகனங்களும், பிற சுற்றுலாப் பயணிகளும் இருந்தனர். இதற்கிடையில், சாலையோரத்தில் இருந்த ஒரு யானைக்கு அருகில் நின்று தனது செல்போனில் செல்பி எடுக்க முற்பட்டார். அப்போது திடீரென அந்த யானை பசுவராஜை விரட்டியது. அவர் பயந்து ஓடி, உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடினார். சிறிது நேரம் யானை அவரைத் துரத்திச் சென்றது. சிறிது தூரம் ஓடியவர், நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அப்போது நெருங்கிவந்த யானை, தனது காலால் அவரை மிதித்தது. இந்த சம்பவத்தை பார்த்ததும் சுற்றியிருந்த மக்கள் பயத்தில் அலறிக்கொண்டு அங்கும் இங்கும் ஓடினர். இருப்பினும், ஆச்சரியப்படும் விதமாக, யானை அங்கிருந்து பின்வாங்கியது, அவர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள் உடனடியாக விரைந்து சென்று காயமடைந்த பசுவராஜை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதனையடுத்து பசுவராஜுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர் இந்த செயலில் ஈடுபட்டதற்கு மன்னிப்பு கேட்க வைத்தனர். அதில் வனப்பகுதிக்கு செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் பசுவராஜ் கேட்டுக் கொண்டார். தற்போது அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
August 12, 2025 12:43 PM IST


