Last Updated:
ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன், யசஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கும் விளையாட வாய்ப்பு வழங்கப்படும்
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், முக்கிய வீரர்கள் சிலருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 போட்டிகள் கொண்ட தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத சூழலில் இளம் கேப்டன் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தொடரை சமன் செய்திருப்பது பாராட்டுகளை குவித்து வருகிறது.
இந்நிலையில் இந்திய அணி தனது அடுத்த போட்டி தொடருக்கு தயாராகி வருகிறது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான உடல் தகுதி தேர்வுகள் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே பல்வேறு சிகிச்சைகளால் அவதிப்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஆசிய கோப்பை தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இங்கிலாந்து கிரிக்கெட் தொடரின் போது காயம் அடைந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திற்கு கூடுதல் ஓய்வு அளிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. சில காலம் ஓய்வில் இருந்த ஸ்ரேயாஸ் அய்யர் அணிக்கு மீண்டும் திரும்ப உள்ளதாக பரவலாக பேசப்படுகிறது.
இதேபோன்று ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய் சுதர்சன், யசஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோருக்கும் விளையாட வாய்ப்பு வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி இம்மாத இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என கூறப்படுகிறது.
August 12, 2025 3:43 PM IST


