Last Updated:
கர்நாடகாவிலும் வைர சுரங்கங்கள் உள்ளன. இருப்பினும் மற்ற மாநிலங்களை விடவும் கர்நாடகாவில் மிக குறைந்த அளவே வைரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது
இந்தியாவில் வைரங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கணிசமாக உள்ளன. குறிப்பாக மத்தியப் பிரதேசம், ஆந்திரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வைரங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.
இவற்றில் மத்தியப் பிரதேசத்தில்தான் 90 சதவீதத்திற்கும் அதிகமான வைரங்கள் வெட்டி எடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய நிலப்பரப்பில் பன்னா என்ற மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள பகுதியில்தான் வைரம் அதிகம் காணப்படுகிறது.
உலகில் ரஷ்யா, போட்ஸ்வானா, கனடா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளில் அதிக அளவு மற்றும் அதிக தரம் கொண்ட வைரங்கள் வெட்டப்படுகின்றன. அவற்றை ஒப்பிடும்போது இந்தியாவில் பெறப்படும் வைரங்களின் அளவு சிறியதாக இருக்கும். மேலும் இந்தியாவில் உள்ள கடுமையான சட்டங்களால் வைரங்களை எளிதில் வெட்டி எடுத்து விட முடியாது.
மத்தியப் பிரதேசத்திற்கு அடுத்தபடியாக ஆந்திராவில் வைரங்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. அனந்தபூர் மாவட்டம் வைர சுரங்கத்தின் மையமாக உள்ளது. கிருஷ்ணா நதிப் படுகையில் அதிக எண்ணிக்கையில் கனிம வளங்கள் உள்ளன.
வைர உற்பத்தியில் ஆந்திராவுக்கு அடுத்த இடத்தில் சத்தீஸ்கர் மாநிலம் உள்ளது. இங்கு ராய்ப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுரங்கங்கள் அமைக்கப்பட்டு வைரத்தின் தாதுக்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. இங்கு கிடைக்கும் வைரங்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெறப்படும் வைரத்தின் அளவை விட சிறியதாகும்.
ஒடிசாவில் மகாநதி ஆற்றுப்படுகை பகுதியில் வைர சுரங்கங்கள் செயல்படுகின்றன. இதனை தவிர்த்து நுவாபடா மாவட்டத்தில் வைரங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டாலும், அவற்றை வெட்டி எடுப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே உள்ளது.
இதேபோன்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் சில பகுதிகளில் வைரங்கள் சுரங்கங்களில் இருந்து வெட்டப்படுகின்றன. கர்நாடகாவிலும் வைர சுரங்கங்கள் உள்ளன. இருப்பினும் மற்ற மாநிலங்களை விடவும் கர்நாடகாவில் மிகக் குறைந்த அளவே வைரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.
March 02, 2025 11:12 AM IST


