International
oi-Vigneshkumar
மாட்ரிட்: வட ஆப்பிரிக்காவில் உள்ள தனது சியூட்டா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய குடியேற்ற நெருக்கடியைத் தொடர்ந்து, ஸ்பெயின் அரசு கடலில் 500 மீட்டர் நீளமுள்ள மிதக்கும் தடுப்புச் சுவரை அமைத்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் எல்லையை மீறி நுழைந்த சம்பவத்துக்கு பிறகு எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் குடியேற்றக் கொள்கை தொடர்பான விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
சட்டவிரோத குடியேற்றம் என்பது சர்வதேச அளவில் மிக பெரிய பிரச்சினையாக இருக்கிறது. உள்நாட்டு மோதல் உட்பட பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் நாடுகளில் இருக்கும் மக்கள், அண்டை நாடுகளுக்கு சென்றால் எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம் என்பதற்காக சட்டவிரோதமாக எல்லை தாண்டுவது தொடர்கதையாக உள்ளது.

அத்துமீறி நுழைந்த அகதிகள்
இதில் உயிரே போகும் ஆபத்து இருந்தாலும் கூட மக்கள் இது போல சட்டவிரோதமாக எல்லை கடப்பதை தொடர் கதையாகவே வைத்திருக்கிறார்கள். அப்படி தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு மொராக்கோ நாட்டை சேர்ந்த அகதிகள் ஸ்பெயின் கட்டுப்பாட்டில் இருக்கும் சியூட்டா பகுதிக்குள் நுழைந்தனர். ஒரே நேரத்தில் சுமார் 50,000 முதல் 60,000 பேர் வரை இதுபோல அத்துமீறி நுழைந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இந்த அசாதாரண சூழலால் எல்லையில் பெரும் குழப்பம் ஏற்பட்ட நிலையில், குறைந்தது 67 பேர் உயிரிழந்தாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. அதில் பலர் கடலில் மூழ்கியும், சிலர் கூட்ட நெரிசலில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பிறகு, எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் கடல் வழியாக நுழைவதை தடுக்க 500 மீட்டர் நீளமுள்ள மிதக்கும் தடுப்பை ஸ்பெயின் அமைத்துள்ளது.
கடும் நடவடிக்கை
இதற்கிடையே நேற்று காலை கடல் வழியாக சியூட்டா கடற்கரைக்குள் நுழைந்த சிலரை ஸ்பெயின் ராணுவத்தினர் மீண்டும் எல்லைக்கு அழைத்து சென்றனர். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் பெர்னாண்டோ கிராண்டே-மார்லாஸ்கா, “சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்போம்.. இந்த சம்பவம் குறித்து ஸ்பெயினும் மொராக்கோவும் இணைந்து விசாரணை நடத்தும்” என்றார்.
இதற்கிடையில், சியூட்டாவில் நடந்த சம்பவம் ஐரோப்பிய அரசியலிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டென்மார்க், இத்தாலி, ஜெர்மனி, கிரீஸ், நெதர்லாந்து உள்ளிட்ட 22 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. சட்டவிரோத குடியேற்றம் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என இந்த நாடுகள் எச்சரித்துள்ளன.
அகதிகள்
இது ஒரு பக்கம் இருக்க சியூட்டாவுக்குள் நுழைந்த பல நூறு பேர் மீண்டும் மொராக்கோவுக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பலர் தாங்களாகவே திரும்பியதாகத் தெரிகிறது. இது தொடர்பாக சட்டவிரோதமாக ஸ்பெயின் பகுதிக்குள் நுழைந்த ஒரு மொரோக்கா இளைஞர் கூறுகையில், “சியூட்டாவில் பல நாட்கள் உணவு கிடைக்காமல் காட்டு பகுதிகளில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனால் மீண்டும் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடிவு செய்தேன்” என்றார். அதேநேரம் அனைவரும் இதுபோல திரும்பவிடவில்லை. சிலர் ஸ்பெயினிலேயே தங்குவோம் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
வட ஆப்பிரிக்கக் கடற்கரை
வட ஆப்பிரிக்கக் கடற்கரையில் மொராக்கோவால் சூழப்பட்ட, ஒரு சிறிய பகுதி தான் சியூட்டா! இது என்ன தான் வட ஆப்பிரிக்காவில் மொரோக்காவால் சூழப்பட்டு இருந்தாலும் கூட இந்த 18 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட தன்னாட்சி நகரம் ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமானதாகும். இந்த சியூட்டா பகுதிக்குள் தான் மொரோக்கா அகதிகள் நுழைய முயன்றனர்.



