Last Updated:
மேற்குவங்கத்தில் பாஜகவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது என பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் மக்களின் ஆதரவுடன் அடுத்த ஆட்சியை பாஜக பிடிக்கும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், நியூஸ்18 குழுமத்தின் தலைமை ஆசிரியரும், நிர்வாக இயக்குநருமான ராகுல் ஜோஷிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்கத்தில் பாஜகவின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது எனத் தெரிவித்த நிதின் நபின், வெறும் மூன்று இடங்களில் வென்றிருந்த பாஜக கடந்த தேர்தலில் 77 இடங்களில் வென்றது. இதே வேகத்தில் பாஜக பயணிக்கும்போது, நிச்சயம் மாநிலத்தில் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், அராஜகம், ஊடுருவல் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றனர். மம்தா பானர்ஜி, தனது அரசியலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என ஊடுருவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் தோல்வி அடைந்துவிட்டார். வாக்காளர்களாக இல்லாதவர்களுக்கு வாதாடுபவர் மம்தா பானர்ஜி என கடுமையாக விமர்சித்த நிதின் நபின், சட்டவிரோதமாக பங்களாதேஷில் இருந்து நாட்டினுள் ஊடுருவியவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டு, நம் குடிமக்கள் மட்டுமே பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்தில் நடக்கும் நலத்திட்டங்கள் எல்லாம் ஊழல் காரணமாக சீர்குலைந்துள்ளது. பெண்களுக்கு வழங்கப்படும் நிதி ஆதாரமும், கமிஷன் எனும் பெயரில் உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் திரும்பப் பெற்றுக்கொள்கின்றனர் என குற்றம் சாட்டினார்.
வங்காளம் முழுவதும் உள்ள பெண்கள் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாக தான் உணர்வதாக கூறிய அவர், பெண் வாக்காளர்கள் பாஜகவை அதிகளவில் ஆதரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். பாஜக-வின் தேர்தல் பிரச்சாரம், உண்மையான வாக்காளர்களைச் சென்றடைவதிலும், நல்லாட்சியை மீட்டெடுப்பதிலும் கவனம் செலுத்தி வருவதாக அவர் வலியுறுத்தினார்.
மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவிலான முடிவுகள் வரும் என நம்பிக்கை தெரிவித்த நிதின் நபின், பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார். கட்சியின் பிரச்சாரச் செய்தியை முன்னிலைப்படுத்திய நிதின் நபின், மோடியின் உத்தரவாதம் வாக்காளர்களிடையே தொடர்ந்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும், மக்கள் முழுமையாக நம்பும் ஒரு வாக்குறுதியாக அது திகழ்வதாகவும் குறிப்பிட்டார்.


