ஷா ஆலம் உயர் நீதிமன்றம், ஒரு பெண் தனது முன்னாள் மாமியாருக்கு RM900,000 செலுத்த உத்தரவிட்டுள்ளது. அந்தத் தொகை RM1.2 மில்லியன் வீட்டுக் கடனின் ஒரு பகுதி என்றும், அது அன்பளிப்பு அல்ல என்றும் தீர்ப்பளித்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதி ஜம்ஹிரா அலி, தமிழ் செல்வி முருகப்பன் தாக்கல் செய்த வழக்கை அனுமதித்தார். மேலும், அந்த RM1.2 மில்லியன் ஒரு குறுகிய கால, நிபந்தனைக்குட்பட்ட கடன் என்பதற்கு “ஒற்றை, சீரான வழக்கு” முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 66 வயதான தமிழ் செல்வி, தனது முன்னாள் மருமகள் 44 வயதான மோகனா சிவராமன் மீது 2021இல் RM1.2 மில்லியனைத் திரும்பக் கேட்டு வழக்குத் தொடர்ந்தார்.
இருப்பினும், மோகனாவின் முன்னாள் கணவரான தனது மகன் திரு. அழகு கணேசனிடம் இருந்து மீதமுள்ள தொகையைப் பெற்றுக்கொள்ள தமிழ் செல்வி ஒப்புக்கொண்டதை அடுத்து, மோகனா RM900,000 மட்டும் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ் செல்வி மற்றும் அழகுக்கு எதிரான மோகனாவின் எதிர் வழக்கையும் நீதிபதி தள்ளுபடி செய்தார். மேலும், தமிழ் செல்விக்கு RM40,000 மற்றும் அழகுக்கு RM7,000 செலவுத் தொகையைச் செலுத்துமாறு மோகனாவுக்கு உத்தரவிடப்பட்டது.
வழக்கின் விவரங்களின்படி, மோகனாவும் – அழகும் 2012-ல் திருமணம் செய்துகொண்டு, தொழிலதிபராகிய தமிழ் செல்வியுடன் வசித்து வந்தனர். ஜூலை 2016இல், கோலாலம்பூரில் உள்ள டி’சாண்ட்ஸ் ரெசிடென்ஸில் RM913,207 விலையுள்ள ஒரு காண்டோமினியம் அடுக்குமாடி குடியிருப்புக்காக மோகனா RM5,000 முன்பதிவு வைப்புத்தொகையாகச் செலுத்தினார். வீட்டுக் கடனுக்குத் தகுதிபெற அவரது வருமானமும் சேமிப்பும் போதுமானதாக இல்லாததால், தனது விண்ணப்பத்தை ஆதரிப்பதற்காக வைப்புத்தொகையில் கணிசமான நிதியைக் காண்பிக்குமாறு வங்கி அவருக்கு அறிவுறுத்தியது.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மோகனா தனது வீட்டுக் கடன் விண்ணப்பத்திற்கு ஆதரவாக RM1 மில்லியன் தொகையை ஒரு கூட்டு நிலையான வைப்புக் கணக்கில் வைக்குமாறு தனது மாமியாரிடம் கேட்டார்.கடன் அங்கீகரிக்கப்பட்டவுடன் பணத்தைத் திருப்பித் தருவதாகவும் உறுதியளித்தார். பின்னர் மோகனா, RHB வங்கி Bhd-யிடம் RM852,938 வீட்டுக் கடனுக்காக ஒரு விண்ணப்பத்தில் கையெழுத்திட்டார்.
அடுத்த மாதம், RM1 மில்லியன் நிலையான வைப்புத்தொகையை வங்கி முழுவதுமாக தனது (மோகனாவின்) பெயரில் மட்டுமே வைக்க வேண்டும் என்று மோகனா தமிழ் செல்வியிடம் தெரிவித்தார். அது பின்னர் செய்யப்பட்டது. மேலும், அந்த நிலையான வைப்புத்தொகையில் கூடுதலாக RM200,000 வைக்குமாறும் மோகனா தமிழ் செல்வியிடம் கேட்டுக்கொண்டார். மோகனாவின் கடன் விண்ணப்பம் வங்கியால் நிராகரிக்கப்பட்ட பிறகு, அவர் தமிழ் செல்விக்கு பணத்தைத் திருப்பித் தராமல், அதற்குப் பதிலாக அந்தப் பணத்தை மற்றொரு கணக்கிற்கு மாற்றினார்.
அதன்பிறகு தமிழ் செல்வி காவல் நிலையத்தில் புகார் அளித்து, RM1.2 மில்லியனைத் திரும்பக் கோரி ஒரு கடிதம் அனுப்பினார். ஆனால் எந்தப் பயனும் இல்லை. இன்று நீதிமன்றத்தில், நீதிபதி ஜம்ஹிரா, தமிழ் செல்வி சமர்ப்பித்த சான்றுகள் அசைக்க முடியாதவை என்றும், அந்தப் பரிவர்த்தனையின் ஒட்டுமொத்த அமைப்பு “ஒரு அன்பளிப்புடன் ஒத்துப்போகவில்லை” என்றும் தீர்ப்பளித்தார். வீட்டுக் கடனுக்கான வங்கியின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற வெளிப்படையான தேவையின் அடிப்படையிலேயே ஒவ்வொரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
அன்பளிப்புகள் வங்கித் தேவைகளை மையமாகக் கொண்டு கட்டமைக்கப்படுவதில்லை. இந்த ஏற்பாடு, தற்காலிகமான, நிபந்தனைக்குட்பட்ட ஒரு இடைக்கால நிதியுதவியின் அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளது. தமிழ் செல்வி சார்பில் ஸ்ரீவித்யா கணபதி மற்றும் ஐஸ்யர்மிலி அக்தரும், மோகனா சார்பில் கமலேஸ்வரி சண்முகமும், அழகு சார்பில் சரினா முஸ்தபா மற்றும் அம்பிகா பாண்டியனும் ஆஜரானார்கள்.




