Last Updated:
இந்தத் தோல்வியின் மூலம் இந்திய ‘ஏ’அணி அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது
இலங்கையின் தம்புள்ளை மைதானத்தில் நடைபெற்ற முத்தரப்பு ‘ஏ’ கிரிக்கெட் தொடரின் 4-வது லீக் போட்டியில், இந்தியா ‘ஏ’மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகள் மோதின. இந்த ஆட்டம் சமனில் (Tie) முடிவடைந்து, பின்னர் நடத்தப்பட்ட ‘சூப்பர் ஓவர்’வழிமுறையில் இலங்கை ‘ஏ’ அணி த்ரில் வெற்றியைப் பெற்றது. இப்போட்டியின் முடிவில் இரு நாட்டு இளம் வீரர்களிடையே மைதானத்திலேயே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் ஆட்டம் பெரும் பரபரப்புடன் நிறைவடைந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ‘ஏ’ அணி, இலங்கை வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஒருகட்டத்தில் 143 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அப்போது 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூரியன்ஷ் ஷெட்கே (72 ரன்கள், 63 பந்துகள்) மற்றும் விப்ராஜ் நிகம் (51 ரன்கள், 49 பந்துகள்) ஆகியோரது ஜோடி அசாத்திய ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்த ஜோடி 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டது. இறுதியில், இந்தியா ‘ஏ’ அணி 49.2 ஓவர்களில் 265 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை ‘ஏ’அணிக்கு, தொடக்க வீரர் நிரோஷன் டிக்வெல்லா 37 ரன்களும், அவிஷ்கா பெர்னாண்டோ 22 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கம் தந்தனர். நடுவரிசையில் தூணாக நின்ற சதீர சமரவிக்ரம 93 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்திய அணியின் அர்ஷத் கான் வீசிய கடைசி ஓவரில் ஆட்டம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியது.
இறுதியில், இலங்கை ‘ஏ’அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்கள் எடுத்ததால் போட்டி ‘டை’ஆனது.
போட்டி சமனானதைத் தொடர்ந்து, மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லாத நிலையிலும் ‘சூப்பர் ஓவர்’ நடத்தப்பட்டது. முதலில் ஆடிய இலங்கை ‘ஏ’ அணி, அர்ஷத் கான் வீசிய ஓவரில் ஒரு சிக்ஸர் உட்பட 16 ரன்கள் குவித்தது. இந்த ஓவரின் போது வைடு மற்றும் நோ-பால் முடிவுகளால் இந்திய கேப்டன் திலக் வர்மா நடுவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அடுத்து 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய இந்தியா ‘ஏ’அணியால், குகதாஸ் மாத்துலன் வீசிய துல்லியமான ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இலங்கை ‘ஏ’ அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.
வெற்றிக்குப் பிறகு, இலங்கை வீரர் விஷேன் ஹலம்பகே இந்திய பேட்ஸ்மேன் சூரியன்ஷ் ஷெட்கேயை நோக்கி ஆக்ரோஷமாக சில வார்த்தைகளைக் கூறி வம்புக்கு இழுத்தார். இதனால் கோபமடைந்த இந்திய இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இலங்கை வீரர் விஷேனை தனது கையால் பின்னுக்குத் தள்ளி கோபத்தை வெளிப்படுத்தினார்.
உடனடியாக டிக்வெல்லா மற்றும் இலங்கை கேப்டன் சஹான் ஆராச்சிகே ஆகியோர் தலையிட்டு வீரர்களைப் பிரித்தனர். பின்னர் இரு அணி வீரர்களும் பரஸ்பரம் கைகுலுக்கிக் கொண்டனர். இந்தத் தோல்வியின் மூலம் இந்திய ‘ஏ’அணி அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.


