சென்னை: சுபமுகூர்த்த நாளான புதன்கிழமை (மார்ச் 12) பத்திரப் பதிவுக்கு சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படும் என்று பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் பத்திரப் பதிவுகள் நடைபெறும் என்பதால், அத்தினங்களில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கப்பட்டு வருகிறது.
தற்போது மாசி மாதத்தின் மங்களகரமான தினமான மார்ச் 12-ம் தேதி அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் என்பதால், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள், இரண்டு சார்பதிவாளர்கள் இருந்தால் 200-க்கு பதில் 300 டோக்கன்கள் வழங்கப்படும்.
அதிகளவில் பத்திரப் பதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 சாதாரண டோக்கன்களுடன், ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 தட்கல் டோக்கன்களும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.