Last Updated:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆண்டு புதிய பேட்டிங் பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கப்போவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
மிஸ்டர் ஐபிஎல் என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவது குறித்து மனம் திறந்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின்போது வர்ணனை செய்துகொண்டிருந்த சுரேஷ் ரெய்னா, சஞ்சய் பங்கர் மற்றும் ஆகாஷ் சோப்ரா ஆகியோர் சென்னை அணியின் நிலை குறித்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
மேலும் இந்த சீசனில் சென்னை அணியின் ஃபார்ம் குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது கருத்து தெரிவித்த சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆண்டு புதிய பேட்டிங் பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கப்போவதாக தெரிவித்தார்.
உடனே மைக்கை எடுத்த ஆகாஷ் சோப்ரா, “அவரது பெயர் ‘எஸ்’ என்ற எழுத்தில் தொடங்குமா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த சுரேஷ் ரெய்னா, “சிஎஸ்கே அணிக்கு அவர் தான் வேகமான அரை சதத்தை அடித்துள்ளார்” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஆகாஷ் சோப்ரா, “இது முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்த தகவலை இங்கே தான் நீங்கள் கேட்கிறீர்கள்” என்று வர்ணனையின்போதே தெரிவித்தார். சுரேஷ் ரெய்னா கடந்த 2008ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை (2020ஆம் ஆண்டை தவிர்த்து) ஐபிஎல் தொடரில் விளையாடினார். இதுவரை 205 போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா, 5528 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
May 26, 2025 11:07 AM IST


