India
oi-Mani Singh S
ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் ஜீரம் காட் பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய மிகக் கொடூரமான தாக்குதலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட 29 பேர் கொல்லப்பட்டனர். சத்தீஷ்கரில் மாநில காங்கிரஸ் தலைமையே கிட்டத்தட்ட இந்த தாக்குதலால் நிலைகுலைந்து போனது. 13 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த தாக்குதல் வழக்கில் குற்றவாளிகள் 10 பேருக்கு என்.ஐ.ஏ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
சத்தீஷ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் ஜீரம் பள்ளத்தாக்கு பகுதி உள்ளது. வனப்பகுதிகள் நிறைந்த இந்த இடத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு காங்கிரஸ் நிர்வாகிகள் வாகனங்களில் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்பொது, அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்ட்டுகள் காங்கிரஸ் தலைவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருந்த நந்தகுமார் படேல், அவருடைய மகன் தினேஷ், பாதுகாப்பு படையினர் பொதுமக்கள் என 29 பேர் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தியது. இதில், 2 பெண்கள் உள்பட 11 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
ஒருவர் உயிரிழந்த நிலையில், ஏனைய பேர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் 10 பேரும் குற்றவாளிகள் என்று கடந்த வாரம் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியிருந்த நிலையில் இன்று குற்றவாளிகள் அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
24 குற்றச்சாட்டுகளில் 7 குற்றச்சாட்டுகளின் கீழ் அனைவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. மேலும், தலா ரூ.800 அபராதமும் விதிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகே இந்த மரண தண்டனையை நிறைவேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை குற்றவாளிகள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்கள். இந்தத் தீர்ப்பை எதிர்த்து 30 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு உரிமை உள்ளது.


