பெங்களூருவில் பரபரப்பாக காணப்படும் சர்ச் ஸ்ட்ரீட் பகுதியில் மார்டன் உடையில் செல்லும் இளம்பெண்களை குறிவைத்து, ரகசிய கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட பெண்களுக்கு தெரியாமலேயே, அவர்களை படம் பிடித்த நபர், அந்த வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு லைக்ஸ்களை அள்ளியுள்ளார். லைக்ஸ் வெறியில் பெண்களின் பிரைவசியை (Privacy) கேள்விக்குறியாக்கியது அம்பலமானதால், பெங்களூரு போலீசார் தாமாக முன்வந்து அடாவடி இளைஞருக்கு எண்ட் கார்டு போட்டுள்ளனர். பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன?
இன்றைய இளைஞர்களில் சிலர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளுவதற்காக பைக் வீலிங், சாகச பயணம் போன்றவற்றில் ஈடுபட்டு சிக்கலில் மாட்டிக் கொள்கின்றனர். குட்டிக்கரணம் பல அடித்தும் ஒரு லைக்ஸ் கூட விழாததால், விபரீத முயற்சியில் சிலர் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்தவகையில் அப்படியொரு நபர், பொது இடத்தில் சுதந்திரமாக உலா வரும் மாணவிகள் மற்றும் இளம் பெண்களை டார்கெட் செய்து சித்து வேலையில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பொது வெளியில் நடந்து சென்றபோது, தனக்கு தெரியாமலேயே யாரோ தன்னை வீடியோ எடுத்துள்ளதாகவும், அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
முகம்சுழிக்கும் வகையில் தன்னை வீடியோ எடுத்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாகவும் கண் கலங்கியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த சிலர், தனக்கு ஆபாசமாக மெசேஜ்கள் அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர் எந்தவொரு ரெஸ்பான்சும் பண்ணவில்லை என் இளம்பெண் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்துள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர் தன்னை மட்டும் இன்றி, பல்வேறு பெண்களை முகம்சுழிக்கும் வகையில் வீடியோ எடுத்து, இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இது போலீசாரின் கவனத்துக்கு சென்றதும், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பெண்களை வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் பெங்களூருவில் உள்ள கே.ஆர்.புரத்தைச் சேர்ந்த குருதீப் சிங் என்பது தெரியவந்தது.
உடனே அவரை தேடிப் பிடித்து போலீசார் கைது செய்தனர். விசாரணையில் 26 வயதான குருதீப் சிங், ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ளார். படித்து விட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் வெட்டியாக இருந்ததால், அவருக்குள் வில்லங்கமான யோசனை உதித்துள்ளது. இதையடுத்து, மத்திய பெங்களூருவில் உள்ள சர்ச் ஸ்ட்ரீட் பகுதிக்கு செல்போன் மற்றும் கேமராவுடனும் சுற்றித் திரிந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து வணிக வளாகங்கள் உட்பட பெரிய பெரிய கடைகள் உள்ளதால் அங்கு ஏராளமான இளம்பெண்கள் ஷாப்பிங் செய்ய வருவது வழக்கம். அவர்களில் மாடர்ன் உடைகளில் வரும் பெண்களை குறிவைத்து குருதீப் சிங் வீடியோ எடுத்துள்ளார். மேலும், சில பெண்களை ஆபாசமாகவும், முகம் சுழிக்கும் வகையிலும் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளார்.
அவற்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, லைக்ஸ்களை அள்ளியுள்ளார். இந்த வீடியோக்களுக்காகவே குருதீப் சிங்கின், இன்ஸ்டாகிராம் பக்கத்தை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாலோ செய்து வந்துள்ளனர். இதையடுத்து, மாணவிகள் மற்றும் இளம் பெண்களை, அவர்களின் அனுமதியின்றி வீடியோ எடுத்து, அவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்த குருதீப் சிங்கிற்கு போலீசார் எண்டு கார்டு போட்டுள்ளனர்.
அத்துடன், அவரிடம் உள்ள அனைத்து வீடியோக்களையும் பறிமுதல் செய்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இன்ஸ்டாகிராமில் மட்டும் பெண்களின் வீடியோக்களை பதிவிட்டாரா அல்லது வேறு ஏதும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டாரா என்ற கோணத்திலும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூருவில் பரபரப்பாக காணப்படும் பகுதியில் மார்டன் உடையில் செல்லும் இளம்பெண்களை குறிவைத்து, ரகசிய கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
July 10, 2025 4:08 PM IST
மாடர்ன் உடை அணிந்த இளம்பெண்களை குறிவைத்து ரகசிய வீடியோ.. இன்ஸ்டா இளைஞர் செய்த அதிர்ச்சி செயல்!

