( ரெ.மாலினி)
மலாக்கா:
கோத்தா மலாக்கா நாடாளுமன்ற உறுப்பினர் கூ போய் தியோங், மலாக்காவின் பெங்காலான் தெலோக் மாஸ், பெர்னு மற்றும் அலாய் பகுதிகளைச் சேர்ந்த பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் வலியுறுத்தினார்.
மலாக்கா கடலோரப் பகுதிகளில் நடைபெற்று வரும் கடல் நிரப்புத் திட்டங்கள் உள்ளிட்ட விரைவான மேம்பாட்டு நடவடிக்கைகள் கடல் உயிரியல் சூழலையும், கரையோர மீன்பிடியை நம்பியுள்ள பாரம்பரிய மீனவர்களின் தொழிலையும் நேரடியாக பாதித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


மீன்பிடிப் பகுதிகள் குறைந்து வருவது, மீன் பிடிப்பு அளவு சரிவடைந்திருப்பது, செயல்பாட்டு செலவுகள் அதிகரித்திருப்பது மற்றும் மணல் அகழ்வு, கடல் நிரப்புப் பணிகளால் மீன்களின் இனப்பெருக்க வாழிடங்கள் சேதமடைந்திருப்பது குறித்து மீனவர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருவதாக அவர் கூறினார்.
சிறிய படகுகளைப் பயன்படுத்தும் பாரம்பரிய மீனவர்களுக்கு தொலைதூர கடற்பகுதிகளுக்குச் செல்ல இயலாததால், கரையோர மீன்பிடிப் பகுதிகள் குறைவது அவர்களின் வருமானத்தை கடுமையாக பாதிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் தரையிறங்கும் தளங்களின் நில உரிமை தொடர்பான தெளிவின்மை, மீனவர்களும் சிப்பி (குபாங்) வளர்ப்போரும் நீண்டகால முதலீடுகளைத் திட்டமிட முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு தீர்வாக, வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் தலைமையில், மத்திய மற்றும் மாநில அரசுகள், சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகள் இடம்பெறும் சிறப்பு இடைநிலை குழுவை அமைத்து பிரச்சினைகளை ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
மேலும், மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் தரையிறங்கும் தளங்களை மீளாய்வு செய்து, அவற்றை மீனவர் சமூகக் காப்பகப் பகுதிகளாக அறிவிக்கவோ அல்லது நீண்டகால பயன்பாட்டு உத்தரவாதம் வழங்கவோ அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
துணைக் கேள்வியின் போது, இது மீனவர்களின் நலன் மட்டுமல்ல, நாட்டின் உணவுப் பாதுகாப்புடனும் நேரடியாக தொடர்புடைய பிரச்சினை என அவர் வலியுறுத்தினார்.
மலாக்கா மீனவர் பிரதிநிதிகள் சிலரும் நாடாளுமன்றத்திற்கு வந்து, கடலோர மேம்பாட்டு மற்றும் அகழ்வுப் பணிகளால் வலைகள் சேதமடைவதும், செயல்பாட்டு சுமை அதிகரிப்பதும் உள்ளிட்ட பிரச்சினைகளை நேரடியாக எடுத்துரைத்ததாக அவர் தெரிவித்தார்.
பொருளாதார வளர்ச்சி அவசியம். ஆனால், நாட்டின் கடல் வளங்களைப் பாதுகாத்து வரும் மீனவர்களின் நலனையும், கடல் வளங்களின் நிலைத்தன்மையையும் புறக்கணிக்கக் கூடாது,” என்றார்.
மேலும், அமைச்சகம் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று, மீனவர் சமூகத்துடன் கலந்துரையாடி, நிலைமையை அடிப்படையாகக் கொண்ட தீர்வுகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இதற்கு பதிலளித்த வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துணை அமைச்சர் சான் பூங் ஹின், மாநில அரசு, மீன்வளத் துறை, எல்.கே.ஐ.எம். மற்றும் மீனவர் சமூகத்துடன் இணைந்து கலந்துரையாடல்களை ஏற்பாடுச் செய்ய அமைச்சகம் ஒருங்கிணைப்பாளராக செயல்படத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
நிலைத்த வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமல்லாமல், நாட்டின் கடல் வளங்களைப் பாதுகாத்து வரும் பாரம்பரிய மீனவர்களின் உரிமைகளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று கூ போய் தியோங் மீண்டும் வலியுறுத்தினார்.



