கோலாலம்பூர்:
மக்காவ் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த மாதம் சுமார் 2.09 மில்லியன் மலேசிய ரிங்கிட் (MOP 4.18 மில்லியன்) மதிப்புள்ள 3 கிலோ கிராம் ஹெராயின் போதைப்பொருளைச் சூரை மீன் (Tuna) தகரப் பெட்டிகளில் மறைத்து கடத்த முயன்ற 24 வயது மலேசிய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் 20-ஆம் தேதி இரவு, தென்கிழக்கு ஆசிய நாடு ஒன்றிலிருந்து மக்காவ் சென்றடைந்த அந்த வாலிபரை அங்கிருந்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிரக் கண்காணிப்பிற்குப் பின் தடுத்து நிறுத்தினர்.
சந்தேகத்தின் பேரில் அவரது உடமைகளைச் சோதித்தபோது, அதில் 49 பிஸ்கட் மற்றும் சூரை மீன் டப்பாக்கள் அடங்கிய பெட்டிகள் இருந்தன. ஒவ்வொரு பெட்டியிலும் இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளும் ஒரு சூரை மீன் டப்பாவும் இருந்தன. எனினும், அந்த மீன் டப்பாக்களைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் சூரை மீனுக்குப் பதிலாக வெள்ளை நிற ஹெராயின் போதைப்பொருள் பவுடர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அந்த வாலிபர் மலேசியாவின் போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றால் இந்த வேலைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும், இதற்காக அவருக்கு 3,000 ரிங்கிட் தருவதாக உறுதியளிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. மற்றொரு தென்கிழக்கு ஆசிய நாட்டிலிருந்து இந்த போதைப்பொருளைப் பெற்றுக்கொண்டு, மக்காவ் வழியாக அருகில் உள்ள பிற பகுதிகளுக்கு விநியோகம் செய்ய அவர் திட்டமிட்டிருந்தார்.
கைது செய்யப்பட்ட வாலிபர் தற்போது மக்காவ் பொதுத் வழக்குத் தொடர்தல் அலுவலகத்திடம் (Public Prosecutions Office) ஒப்படைக்கப்பட்டுள்ளார். மக்காவ் சட்டப்படி, போதைப்பொருள் கடத்தல் என்பது மிகக் கடுமையான குற்றமாகும். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.



