Business
oi-Velmurugan P
சென்னை: இணைய வசதி இல்லாமலேயே ஆப்லைனில் யு.பி.ஐ. சேவையை பயன்படுத்தி பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் சேவைகளை போன்பே அதிகாரப்பூர்வமாக வழங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள 20 கோடிக்கும் அதிகமான இணையவசதி இல்லாத போன் பயனர்களுக்காக, போன்பே நிறுவனம் ‘போன்பே யு.பி.ஐ. 123பே’ என்ற சிறப்பு செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இது உங்கள் போனில் உள்ள குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது. பரிவர்த்தனை தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக குறியாக்கம் செய்யப்பட்டு, சாதாரண செல்போன்களுக்கு நெட்வொர்க் வழியாக அனுப்பப்படும். எனவே, 2ஜி சிக்னல் மட்டுமே உள்ள கிராமப்புறங்களிலும் இது தடையின்றி வேலை செய்யும்.

மொபைல் எண் அல்லது யு.பி.ஐ. ஐ.டி. மூலம் பணம் அனுப்பலாம், வங்கி கணக்கு இருப்பைச் சரிபார்க்கலாம். மேலும், கேமரா வசதி கொண்ட பட்டன் போன்களில் கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்தும் பணம் செலுத்தலாம். ஒரு முறைக்கு அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரையிலும், ஒரு நாளைக்கு மொத்தம் ரூ.10 ஆயிரம் வரையிலும் பணம் அனுப்ப முடியும்.
இணைய வசதி இல்லாத போன்களில் மொபைலில் 10 ஆயிரம் வரை பணம் அனுப்புவது எப்படி?
இன்றும் பல மக்கள் இணைய வசதி இல்லாத சாதாரண பட்டன் போன்களை தான் பயன்படுத்துகிறார்கள். இன்னும் பலர் இணைவசதி இல்லாத மலைப்பகுதிகளிலும் வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களுக்காகவே ‘UPI 123PAY’ சேவையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த வசதி மூலம் தினசரி 10,000 ரூபாய் வரை எளிதாக யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்ப முடியும்.
எப்படி பயன்படுத்துவது
நீங்கள் அதற்கு, உங்கள் வங்கிக் கணக்கில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து 08045163666, 08045163581 அல்லது 6366200200 ஆகிய எண்களில் ஒன்றிற்கு அழைப்பு விடுக்க வேண்டும். பின்னர் குரல் வழி வழிகாட்டுதலைப் பின்பற்றி, பணம் அனுப்ப விரும்புபவரின் மொபைல் எண் அல்லது UPI ID-ஐ டைப் செய்ய வேண்டும்.
அனுப்ப வேண்டிய தொகையை உள்ளிட்டு, உங்கள் 4 அல்லது 6 இலக்க UPI PIN எண்ணை பதிவிட்டால் பணம் உடனடியாகச் சென்றுவிடும்.
மிஸ்டு கால் சேவை மூலம் பணம் அனுப்ப வசதி உள்ளது.
பொருட்கள் வாங்கும் கடைகளில் அல்லது தனிநபருக்குப் பணம் அனுப்ப, அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். உடனடியாக உங்களுக்கு ஒரு அழைப்பு அல்லது SMS வரும். அதில் தொகையை உறுதிசெய்து UPI PIN பதிவிட்டால் பணம் அவருக்கு போகும்
அதேநேரம் கேமரா வசதி கொண்ட பட்டன் போன்கள் இருந்தால் இன்னும் எளிமையாக பணம் அனுப்பலாம். (உதாரணமாக PhonePe UPI 123Pay போன்ற செயலிகள் மூலம்) நேரடியாக QR கோடை ஸ்கேன் செய்தும் பணம் அனுப்ப முடியும். ஆனால் மற்ற யுபிஐ போல் ஒரு லட்சம் அனுப்ப முடியாது.
ஒருவருக்கு அதிகபட்சமாக 5,000 ரூபாய் வரை அனுப்பலாம். ஒரு நாளைக்கு மொத்தம் அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை அனுப்ப முடியும்.
UPI Lite மூலம் எளிதாகப் பணம் அனுப்பலாம்
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, மேகமலை, வாகமன், மூணாறு, குரங்கணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2 ஜிடவர் தான் பல இடங்களில் கிடைக்கும். 4 ஜி, 5 ஜி டவர் கிடைக்காது, அப்படியான இடங்களில் ஸ்மார்ட்போன்களில் இன்டர்நெட் அல்லது மொபைல் டேட்டா/Wi-Fi இல்லாத நேரங்களில் USSD கோட் (*99#) அல்லது UPI Lite மூலம் எளிதாகப் பணம் அனுப்ப முடியும். அதற்கும் வசதிகள் உள்ளது.
இதற்கான வழிமுறைகள் பற்றியும் பார்ப்போம்.
1. *99# என்ற USSD சேவை – அனைத்து போன்களுக்கும் பொருந்தும்
இது இன்டர்நெட் மற்றும் 4G/5G டவர் இல்லாத இடங்களில், சாதாரண நெட்வொர்க் சிக்னலை (2G Voice Network) மட்டும் பயன்படுத்தி வேலை செய்யும் அமைப்பாக உள்ளது.
முதல்படி: உங்கள் மொபைலின் டயல்பேடில் *99# என்று டைப் செய்து அழைப்பு (Call) விடுங்கள். அதாவது வங்கியுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து நீங்கள் அழைக்க வேண்டும்.
இரண்டாம்படி: திரையில் தோன்றும் மெனுவில் 1 என்று டைப் செய்து ‘Send Money’ என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
மூன்றாம்படி: நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் செல்போன் நம்பர், யுபிஐ ஐடி அல்லது வங்கி கணக்கு எண் மற்றும் ஐஎப்எஸ்சி ஆகியவற்றில் ஒன்றை உள்ளிட வேண்டும். எது உங்களுக்கு தெரியுமோ அதனை உள்ளிட வேண்டும்.
நான்காம்படி: அனுப்ப வேண்டிய தொகையை உள்ளிட்டு, உங்கள் UPI PIN எண்ணை பதிவிட்டால் பணம் உடனடியாகச் சென்றுவிடும்.
UPI Lite (ஆஃப்லைன் பேமெண்ட்ஸ் வசதி எப்படி
Google Pay, PhonePe அல்லது Paytm செயலிகளில் நீங்கள் ஏற்கனவே UPI Lite வசதியைச் செயல்படுத்தி இருந்தால், சிறிய தொகைகளுக்கு இன்டர்நெட் இல்லாமலேயே பணத்தை எளிதாக அனுப்ப முடியும். உங்கள் UPI Lite வாலட்டில் முன்னரே பணம் இருப்பு வைத்திருந்தால், இன்டர்நெட் இல்லாத இடங்களிலும் கடைகளில் உள்ள QR கோடை ஸ்கேன் செய்து உடனடியாகப் பணம் செலுத்திவிடலாம்.. இதற்கு யுபிஐ பின் கூட தேவையில்லை; நொடிகளில் பணம் அவரது வங்கி கணக்கிற்கு போய்விடும்.



