Last Updated:
நீட் தேர்வு விவகாரத்தில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி நாடாளுமன்றம் நோக்கி பேரணி சென்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை காவல் துறையினர் தடியடி நடித்து விரட்டியடித்தனர்.
நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கட்டாயப்படுத்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதே இடத்தில் அவருக்கு ஆதரவாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், ஜந்தர் மந்தரில் இருந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பதாகைகளை ஏந்தியபடி பேரணி சென்றனர். ஆனால், தடையை மீறி பேரணி செல்ல எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பெண்கள், இளைஞர்கள் என அனைவர் மீதும் காவல் துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் நாலாபுறமும் இளைஞர்கள் சிதறி ஓடியதால் போர்க்களம் போல் காட்சி அளித்தது. பாதுகாப்பு படையினரின் தாக்குதலையும் பொருட்படுத்தாமல் சில இளைஞர்கள் போராட்டக் களத்தை விட்டு வெளியேற மறுத்தனர்.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர். போராட்டக்காரர்களில் மற்றொரு தரப்பினர் தேசிய கொடியை ஏந்தியபடி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர். நாடாளுமன்ற வளாகம் அருகே நின்ற பாதுகாப்பு படையினர் இளைஞர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்டினர்.
நாடாளுமன்றத்தின் நுழைவு வாயில் மூடப்பட்டு, துப்பாக்கி ஏந்திய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய 50க்கும் மேற்பட்டவர்களை காவல் துறையினர் இழுத்துச் சென்றனர்.
இதற்கிடையே, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சவ்ரவ் தாஸ் மற்றும் அஷுதோஸ் ரங்கா ஆகியோர் மத்திய அமைச்சர் ஜேபி நட்டாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மருத்துவமனையில் உள்ள சோனம் வாங்சுக்கை விடுப்பது, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி பறிப்பு, நீட் முறைகேடு, வினாத் தாள் கசிவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி ஆகிய மூன்று கோரிக்கைகளை அடங்கிய மனுவை வழங்கினர்.
இதனிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் எம்பிக்களை கரப்பான்பூச்சி கட்சித் தலைவர்கள் சந்திக்கும் வரையோ அல்லது மருத்துவமனையில் தன்னை எம்பிக்கள் வந்து சந்திக்கும் வரையிலும் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கைப்பட எழுதிய கடிதத்தில் சோனம் வாங்சுக் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மத்திய அரசு தங்களது கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என டெல்லியில் உள்ள கேரள மாநில இல்லம் அருகே கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


