Last Updated:
பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த வழக்கில் 4 பேர் கைது. ஆர்சிபி நிர்வாகம், டிஎன்ஏ அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு. முதல்வர் சித்தராமையா விசாரணை ஆணையம் அமைத்தார்.
பெங்களூருவில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேர் உயிரிழந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 18 ஆண்டுகளுக்குப் பின் ஆர்சிபி அணி வெற்றி பெற்ற நிலையில், பெங்களூருவில் நடந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் பல லட்சம் ரசிகர்கள் திரண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 56 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு ஆர்சிபி அணியின் அலட்சியமே காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரசிகர்கள் பெரும் உணர்வெழுச்சியில் இருப்பதால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அவகாசம் வேண்டும் என்றும் ஞாயிற்றுக்கிழமை வெற்றி கொண்டாட்டத்தை நடத்தலாம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், வெற்றிக் கொண்டாட்டத்தைத் தள்ளி வைத்தால் வெளிநாட்டு வீரர்கள் உடன் இருக்கமாட்டார்களே என்று ஆர்.சி.பி அணி நிர்வாகம் கவலைத் தெரிவித்ததாகவும் அதைத்தொடர்ந்து புதன்கிழமையன்று வெற்றிக் கொண்டாட்டத்தை நடத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதனடிப்படையில், கூட்ட நெரிசல் தொடர்பாக ஆர்.சி.பி. அணி நிர்வாகிகள், நிகழ்ச்சியை நடத்திய டிஎன்ஏ நிறுவன அதிகாரிகள் மற்றும் கர்நாடக கிரிக்கெட் வாரியம் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கவனக்குறைவாக செயல்பட்டு நெரிசலுக்கு வழி வகுத்தல், அலட்சியம் காரணமாக மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, பெங்களூருவில் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சித்தராமையா, கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறியதற்காக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் பி.தயானந்த், கூடுதல் ஆணையர் விகாஸ் குமார், துணை ஆணையர் சேகர் உட்பட ஐந்து காவல்துறை அதிகாரிகளை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக ஆர்சிபி அணி நிர்வாகிகள், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக ஆர்சிபி அணியின் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில் உரிய முறையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, ஆர்சிபி அணியின் நிகில் சோஸ்லே, டி.என்.ஏவின் சுனில் மேத்யூ உள்ளிட்ட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கர்நாடக கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் வீடுகளில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Bangalore,Karnataka
June 06, 2025 9:31 AM IST


