கோலாலம்பூர்:
புத்ராஜெயா வழித்தடத்திலான MRT ரயில் சேவையில் ஏற்பட்ட சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்டு, இன்று (செப்டம்பர் 2) மாலை 6.56 மணி முதல் ரயில் சேவைகள் மீண்டும் முழுமையாகத் தொடங்கப்பட்டுள்ளன.
இன்று பிற்பகல் 4.35 மணியளவில் கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த வழித்தடத்தில் ரயில்களின் இயக்கம் மெதுவாக இருந்ததுடன் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இது குறித்து ரேபிட் கேஎல் (Rapid KL) நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஆய்வு மற்றும் சீரமைப்புப் பணிகளுக்குப் பிறகு சிக்னல் கோளாறு சரிசெய்யப்பட்டுச் சேவை மீட்கப்பட்டுள்ளது. சேவை பாதிப்பின் போது இயக்கப்பட்ட மாற்று ரயில் சேவைகள் திரும்பப் பெறப்பட்டு, ரயில்களின் வருகை இடைவெளி படிப்படியாகச் சீரமைக்கப்பட்டு வருகிறது,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பயணிகளின் வசதிக்காகக் குவாசா டாமன்சாரா மற்றும் கெப்போங் பாரு ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்பட்ட இலவச இடைமாற்றுப் பேருந்துச் சேவைகள் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் சேவைகள் பாதுகாப்பாகவும் சீராகவும் இயங்குவதை உறுதிசெய்யத் தொழில்நுட்பக் குழுவினர் சிக்னல் அமைப்பையும் ரயில் இயக்கத்தையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஏற்பட்ட அசௌகரியத்திற்கு ரேபிட் கேஎல் நிறுவனம் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.



