பெஸ்டினெட் (Bestinet) நிறுவனம் உருவாக்கிய புதிய வெளிநாட்டுத் தொழிலாளர் ஆட்சேர்ப்பு முறையை மலேசியா அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடக நிறுவனம் ஒன்று வெளியிட்ட செய்தி, சரிபார்க்கப்படாதது மற்றும் துல்லியமற்றது என மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அமைச்சரவையில் எந்தவொரு முன்மொழிவையும் சமர்ப்பிக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் தமக்கே தெரியாத பல விவரங்கள் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“முன்மொழியப்பட்டதாகக் கூறப்படும் அந்த முறை பற்றி என்னை விட அவர்களுக்கே அதிகம் தெரிந்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. நான் அமைச்சரவையில் இது தொடர்பாக எதையும் சமர்ப்பிக்கவில்லை, ஆனால் அவர்களால் அதனைப் பற்றி விரிவாக விளக்க முடிகிறது,” என்று அவர் இன்று விஸ்மா பெர்னாமாவில் நடைபெற்ற கான்கார்ட் கிளப் (Concorde Club) உடனான கலந்துரையாடலின் போது தெரிவித்தார். பெர்னாமா தலைவர் டத்தோஸ்ரீ வோங் சுன் வாய் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடல், ‘வேலை, ஊதியம் மற்றும் எதிர்காலம்’ என்ற தலைப்பில் அமைந்திருந்தது.
புளூம்பெர்க் (Bloomberg) வெளியிட்ட அந்த அறிக்கையில், இடைத்தரகர்களின் தலையீடு மற்றும் அதிகப்படியான கட்டணங்கள் இன்றி, நிறுவனங்கள் நேரடியாக வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த இந்த மென்பொருள் உதவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ஒரு தொழிலாளருக்கான ஆட்சேர்ப்புச் செலவாக 1,000 அமெரிக்க டாலர் (RM4,700) விதிக்கப்படும் என்ற அந்த அறிக்கையின் கூற்றையும் டத்தோஶ்ரீ ரமணன் நிராகரித்தார். அந்தத் தொகை முற்றிலும் தவறானது. புலம்பெயர்வுக்கான செலவை பூஜ்ஜியமாக்கும் (zero migration cost) இலக்கை நோக்கி அரசாங்கம் நகர்ந்து வருவதாக நான் தொடர்ந்து கூறி வருகிறேன். அதற்கு முரணான இத்தகைய கருத்துக்கள் வேடிக்கையானவை,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய அமைச்சகங்களையோ அல்லது தம்மையோ நேரடியாகத் தொடர்பு கொள்ளாமல் இத்தகைய செய்திகள் வெளியிடப்பட்டது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். ஒருவேளை உரிய பதில் கிடைக்காவிட்டாலும் கூட, உறுதிப்படுத்தப்படாத தகவல்களை வெளியிடுவது நியாயமற்றது என்றும், இது பொறுப்பற்ற மற்றும் நெறிமுறையற்ற செயல் என்றும் அவர் வர்ணித்தார். பெஸ்டினெட் நிறுவனம் 2011 முதல் மலேசியாவில் இயங்கி வருவதாகவும், உள்துறை மற்றும் மனிதவள அமைச்சகங்களால் பயன்படுத்தப்படும் வெளிநாட்டுத் தொழிலாளர் மையப்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்பை (FWCMS) அது வழங்கி வருவதாகவும் டத்தோஶ்ரீ ரமணன் குறிப்பிட்டார். கோவிட்-19 காலகட்டத்தில் சைபர் தாக்குதல்களைத் தகர்த்து, எவ்வித பாதுகாப்பு மீறல்களும் இன்றி இந்த அமைப்பு திறம்பட செயல்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் உட்பட சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.






