Last Updated:
மும்பையில் பிரியாணிக்குப் பின் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. உணவு ஒவ்வாமையால் அசம்பாவிதம் நிகழ்ந்ததா? அல்லது வேறு ஏதேனும் சதிச் செயலா? நடந்தது என்ன?.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்தவர் அப்துல்லா தொகாடியா. 40 வயதான இவர் தனது மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகளுடன் பைதோனி பகுதியில் வசித்து வந்துள்ளார். சனிக்கிழமை இரவில் உறவினர்கள் 5 பேர் மற்றும் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்றுள்ளார். இரவு 10.30 மணியளவில் அனைவரும் பிரியாணி சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து உறவினர்கள் அவரவர் வீட்டிற்கு சென்றதும் அப்துல்லா தனது மனைவி மற்றும் மகள்களுடன் திரும்பியுள்ளார்.
வீட்டிற்கு வந்ததும் அதிக வெப்பம் நிலவியுள்ளது. இதனால், நள்ளிரவு ஒரு மணியளவில் நான்கு பேரும் சேர்ந்து தர்பூசணி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. பின்னர், அனைவரும் தூங்கச் சென்ற நிலையில் அதிகாலை 5 மணியளவில் ஒருவர் மாறி ஒருவருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளனர். உடனே குடும்ப மருத்துவரை அழைத்து முதலுதவி சிகிச்சை பெற்றுள்ளனர். இருந்த போதும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆனால், ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் 13 வயதான இளைய மகள் ஜைனாப் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அன்றைய தினமே இரவு 10.30 மணிக்கு அப்துல்லாவும் உயிரிழந்தார். தொடர்ந்து அவரின் மனைவி நஸ்ரின், 16 வயது மகள் ஆயிஷா ஆகியோர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அப்துல்லா குடும்பத்துடன் பிரியாணி சாப்பிட்ட உறவினர்கள் 5 பேரும் நலமுடன் இருப்பது தெரியவந்தது.
இதனால், நள்ளிரவில் தர்பூசணி சாப்பிட்ட பின்பு தான் அப்துல்லா குடும்பத்தினருக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இருந்த போதும் உடற்கூராய்வு அறிக்கைக்குப் பின்னரே இறப்புக்கான முழு விவரமும் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்கிடையில் உறவினர்களுடன் வெளியே சென்று திரும்பியதும் அப்துல்லா குடும்பத்தினர் விபரீத முடிவு ஏதேனும் எடுத்தனரா எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. அல்லது சதித் செயல் ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்படுகிறது.
தர்பூசணி இயற்கை நிறத்தைவிட அதிக சிவப்பாக தெரிவதற்காக சில நேரங்களில் ‘எரித்ரோசின்’ போன்ற வண்ணங்கள் சேர்ப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், விரைவில் பழுக்க வைப்பதற்காக ‘கால்சியம் கார்பைடு’ அல்லது ‘ஆக்சிடாசின்’ போன்ற ரசாயனங்களும் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இதுபோன்ற ரசாயனம் கலந்த தர்பூசணியை உட்கொண்டால் உடல் உபாதை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் மும்பையில் இரவில் பிரியாணி உட்கொண்ட பின்னர் தர்பூசணி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, போலீசார் விசாரணை முடிவில் மரணத்தில் உள்ள மர்மம் விலகுமா?.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
பிரியாணிக்குப் பின் தர்பூசணி சாப்பிட்டதால் விபரீதம்? – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மரண மர்மம் விலகுமா?


