அரசாங்கத்தின் இரு முக்கிய பிரமுகர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுர குமார திஸாநாயக்க மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர ஆகியோருக்கு எதிராகவே இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
திறைசேரி விவகாரம்
நிதி அமைச்சரான ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையானது, அரசாங்கத்தின் திறைசேரியிலிருந்து சுமார் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் முறைகேடாக வெளிநாட்டு போலி கணக்கு ஒன்றிற்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

நிதி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய முறைகேடு தொடர்பாக அவரிடம் விளக்கம் கோரும் வகையில் இந்தப் பிரேரணை திட்டமிடப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்
மறுபுறம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகரவுக்கு எதிரான பிரேரணையானது ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தை மையமாகக் கொண்டுள்ளது.

குறித்த தாக்குதல்கள் இடம்பெற்ற சமயத்தில் அவர் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியாகப் பணியாற்றியதாகவும், அனர்த்தத்தைத் தடுப்பதற்கான உரிய நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை என்றும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்தப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த இரு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளுக்கும் ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைத் திரட்டும் பணிகளை அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

