Last Updated:
பிரதமரும் பிற முக்கிய அதிகாரிகளும் சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, அவர்களுக்கான அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளராகவும் இவர் செயல்படுகிறார்.
டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் ஆகிய மூவரும் கைகளைக் கோர்த்து நின்ற புகைப்படம் சர்வதேச அளவில் பெரும் கவனம் ஈர்த்தது. அந்த புகைப்படத்தில் தலைவர்களுடன் நின்ற நான்காவது நபரான இந்திய சித்தார்த் பாபு (Siddharth Babu) பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
36 வயதான சித்தார்த் பாபு, 2017-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய வெளியுறவுத் துறை (IFS) அதிகாரி ஆவார். இவர் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்திய குடிமைப் பணிகள் தேர்வில் அகில இந்திய அளவில் 15-வது ரேங்க் பெற்று தேர்ச்சியடைந்தவர்.
கேரள மாநிலம் கொச்சியின் கலூரைச் சேர்ந்த சித்தார்த் பாபு, கோதமங்கலத்தில் உள்ள மார் அத்தனாசியஸ் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (B.Tech) முடித்தார். அதன் பிறகு ஒரு மின்-வர்த்தக (e-commerce) நிறுவனத்தில் இரண்டரை ஆண்டுகள் பணியாற்றினார்.
முதல் முயற்சியில் தேர்ச்சி பெற முடியாவிட்டாலும், 2017-ஆம் ஆண்டு தனது 26-வது வயதில் 15-வது ரேங்க் எடுத்து சாதனை படைத்தார். தொடர்ந்து, இந்திய வெளியுறவுச் சேவையைத் (IFS) தேர்வு செய்தார்.
வெளிநாட்டுச் சேவையில் இணைந்த பிறகு, கட்டாய மொழியாக ‘மேண்டரின்’ (சீன மொழி) கற்றுக் கொண்டார். 2018 முதல் 2022 வரை பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றியபோது, சீன மொழி, அந்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தைக் ஆழமாகக் கற்றுக்கொண்டார். அமெரிக்காவில் உள்ள மிடில்பரி சர்வதேச ஆய்வுகள் நிறுவனத்தில் ஆங்கிலம்-சீன மொழிகளுக்கான மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்புப் படிப்பில் (Master’s in Translation and Interpretation) முதுகலை பட்டம் பெற்றார்.
தற்போது வெளியுறவு அமைச்சகத்தின் கிழக்கு ஆசியப் பிரிவில் (East Asia Division) துணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். இப்பிரிவு சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் வட கொரியாவுடனான இந்தியாவின் உறவுகளைக் கவனித்துக்கொள்கிறது.
பிரதமரும் பிற முக்கிய அதிகாரிகளும் சீனத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, அவர்களுக்கான அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாளராகவும் (Interpreter) இவர் செயல்படுகிறார்.


