இந்த பையோட விலை ரூ.8.3 லட்சமா? சர்வதேச பிராண்டுகளின் அட்ராசிட்டி..! இதை கேட்க ஆளில்லையா?
உலக அளவில் புகழ்பெற்ற ஃபேஷன் பிராண்டுகள் பலவும் இந்திய பொருட்களையும் இந்திய கலாச்சாரத்தோடு ஒன்றிணைந்த கலை பொருட்களையும் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்க்கின்றன. அப்படி அண்மையில் சர்வதேச ஆடம்பர ஃபேஷன் பிராண்டான ‘ஃபெண்டி’ (Fendi) நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய ஹேண்ட் பேக் பெரும் விவாதத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் பாரம்பரிய நவராத்திரி கலை வடிவங்களை கொண்ட ஹேண்ட் பேக் நம்ம ஊர் சந்தையில் சொற்ப விலைக்கே கிடைக்கும். ஆனால் Fendi நிறுவனம் இந்த பையின் விலையை 8.3 லட்ச ரூபாய் (சுமார் $10,000) என நிர்ணயம் செய்துள்ளது. இதற்கு இந்தியாவின் பிரபல தொழிலதிபர்களான ஹர்ஷ் கோயங்கா மற்றும் கிரண் மஜும்தார்-ஷா ஆகியோர் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

இத்தாலியை சேர்ந்த ஆடம்பர பிராண்டான ஃபெண்டி, Baguette 26424: Multicolour Re-Edition bag with embroidery and mirrors என்ற பெயரில் புதிய பையை அறிமுகப்படுத்தியுள்ளது. வண்ணமயமான நூல்கள், மணிகள் மற்றும் சிறிய கண்ணாடிகள் பதிக்கப்பட்டு முழுமையாக கைவேலைப்பாட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பையில் 39,500 மணிகளும், 475 கண்ணாடிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பையை உருவாக்க 138 மணி நேரத்திற்கும் மேலாகும் என தெரிவித்துள்ளது. இதன் விலையை 8.3 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்து அதிர்ச்சியை தந்துள்ளது.
இந்த பையின் வடிவமைப்பு குஜராத் மற்றும் ராஜஸ்தான் வீதிகளிலும், உள்ளூர் சந்தைகளிலும் வெறும் 500 ரூபாய்க்கும் குறைவான விலைக்கு கிடைக்கும் பாரம்பரிய துணிப்பைகளை அச்சு அசலாக ஒத்திருக்கிறது. குஜராத்தில் நவராத்திரி விழாக்களின் போது பெண்கள் பெரும்பாலும் இந்த பைகளை தான் பயன்படுத்துவார்கள்.
இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆர்.பி.ஜி. என்டர்பிரைசஸ் தலைவர் ஹர்ஷ் கோயங்கா Prada-வின் கோலாபுரி செருப்பு சர்ச்சைக்கு பிறகு, இதோ வந்துவிட்டது ஃபெண்டியின் ‘நவராத்திரி’ பை. குஜராத் வீதிகளில் 500 ரூபாய்க்கு கிடைக்கும் ஒரு வடிவமைப்பிற்கு 8.3 லட்சத்தை கட்டணமாக வசூலிக்கிறார்கள்; ஆனால், இந்திய கைவினைஞர்களுக்கு எந்தவித பாராட்டும் அல்லது கிரெடிட்டும் வழங்கப்படவில்லை. ஆடம்பர பிராண்டுகள் எப்போது நமது கைவினை கலைகளை சுரண்டுவதை நிறுத்துவார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
After the Prada Kolhapuri chappal scandal, here comes the Fendi “Navratri” bag. Charging ₹8.3 Lakhs for a design that looks exactly like a ₹500 bag available in the streets of Gujarat. And zero credit to Indian artisans. When will luxury brands stop colonising our crafts? pic.twitter.com/mneHhBUQNt
— Harsh Goenka (@hvgoenka) September 14, 2026 “>
பயோகான் நிறுவனர் கிரண் மஜும்தார்-ஷா இந்த விவகாரத்தில் ஃபெண்டி நிறுவனத்தைக் கடுமையாக சாடியுள்ளார். இது அப்பட்டமான கலாச்சார அபகரிப்பு என கூறியுள்ளார். இது நாகரிகமான செயல் அல்ல. நமது பாரம்பரிய கைவினை கலையை, அதை உருவாக்கி பாதுகாத்த கைவினைஞர்களுக்கு எந்தவித கிரெடிட்டும் அளிக்காமல், ஒரு சொகுசு பொருளாக மறுவடிவமைத்து விற்பது நமது உண்மையான திறமையையும் பாரம்பரியத்தையும் குறைத்து மதிப்பிடுவதாகும் என கூறியுள்ளார்.
This is a case of cultural appropriation & not in good taste. Repackaging India’s traditional craft as luxury, without credit to the artisans who created and preserved it, undermines our authentic talent and heritage. Indian craftsmanship deserves recognition, not imitation. https://t.co/42pENpp10F
— Kiran Mazumdar-Shaw (@kiranshaw) September 15, 2026 “>
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் ஃபெண்டி நிறுவனத்தின் இந்தச் செயலுக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர், ஃபெண்டி நிறுவனத்தின் லோகோ இல்லாவிட்டால் இந்த பைக்கு யாரும் 500 ரூபாய்க்கு மேல் கொடுக்க மாட்டார்கள் என்று கிண்டல் செய்துள்ளனர்.
சீனா போன்ற நாடுகள் செய்வது போல இந்தியாவும் இதுபோன்ற சொகுசு பிராண்டுகளுக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இந்தியாவில் அவற்றின் விற்பனையை தடுத்து நிறுத்திவிட்டு உள்நாட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் சில பயனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஃபெண்டியின் இந்த பை இத்தாலியில் தயாரிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், உண்மையில் இது மும்பையில் உள்ள சாணக்கியா என்ற புகழ்பெற்ற கைவினை மற்றும் எம்பிராய்டரி பட்டறையில்தான் கைவேலையாக தயாரிக்கப்பட்டுள்ளது. சணாக்யா நிறுவனம் பல ஆண்டுகளாக பிரதா, ஃபெண்டி போன்ற பல ஐரோப்பிய ஃபேஷன் பிராண்டுகளுக்கு தேவையான கைவேலைப்பாட்டு துணிகளை தயாரித்து வழங்கி வருகிறது.
இந்த வேலைப்பாடுகளை செய்தது இந்திய கைவினைஞர்கள்தான் என்றாலும், ஃபெண்டியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இந்தியா, குஜராத், நவராத்திரி அல்லது இந்த வடிவமைப்பு எதிலிருந்து ஈர்க்கப்பட்டது என்பது பற்றிய எந்தவொரு குறிப்பும் இடம்பெறவில்லை. இது தான் பலருக்கும் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பிரதா நிறுவனம், இந்தியாவின் பாரம்பரிய கோலாபுரி செருப்புகளை போன்றே காலணிகளை தயாரித்து மிக அதிக விலைக்கு விற்று கடும் விமர்சனங்களைச் சந்தித்தது.

