கோலாலம்பூர்:
இணையப் பக்கங்கள் மூலமாகக் காதல் வல விரித்து பண மோசடியில் ஈடுபடும் ‘லவ் ஸ்கேம்’ (Love Scam) கும்பலைச் சேர்ந்த 6 வெளிநாட்டு ஆண்களுக்கு புக்கிட் மெர்தாஜாம் மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று தலா 9,000 ரிங்கிட் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட சீனா மற்றும் தைவான் நாட்டைச் சேர்ந்த அந்த 6 நபர்களும், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மாண்டரின் மொழியில் வாசித்துக் காட்டப்பட்ட போது, நீதிமன்றத்தில் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
மஜிஸ்திரேட் ரோஷாயாத்தி ராடெல்லா முன்னிலையில் நடைபெற்ற இந்த விசாரணையில், குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தண்டனை பெற்றவர்களில் வூ சுன்ஷெங் (24), வாங் ஜுன்யே (35), குவாய் மிங் (28), காவ் யாங் (35), ஷூ வென்டாவ் (40) ஆகிய 5 பேர் சீனப் பிரஜைகள் ஆவர். சென் நன் (28) என்ற மற்றொரு நபர் தைவான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரும் கடந்த ஜூன் 1-ஆம் தேதி இரவு 10.30 மணியளவில், செபராங் பிறை தெங்கா மாவட்டத்தில் உள்ள தாமான் பிங்கிரான் புக்கிட் மின்யாக் (Taman Pinggiran Bukit Minyak) குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இணையம் வழியாக இந்த ஆன்லைன் மோசடி (Online Scam) நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
துணை அரசு வழக்கறிஞர் சுல்ஃபட்ஸ்லி ஹசான், இந்த வழக்கை குற்றவியல் சட்டம் பிரிவு 417 (ஏமாற்றுதல்) மற்றும் குற்றச் சதித் திட்டத்திற்கான பிரிவு 120B(1) ஆகியவற்றின் கீழ் நீதிமன்றத்தில் கொண்டு வந்தார்.
வழக்கை விசாரித்த மஜிஸ்திரேட், குற்றவாளிகள் அறுவருக்கும் தலா RM9,000 அபராதம் விதித்தார். ஒருவேளை இந்த அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால், அவர்களுக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் மாற்றுத் தீர்ப்பு வழங்கியுள்ளார்.




