Cricket
oi-Yogeshwaran Moorthi
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியுடன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என்று பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். ஒரே நாளில் என்ன மாற்றம் நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நாளை லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்கிறதோ, அந்த அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும். இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே லார்ட்ஸ் போட்டியுடன் ரோகித் சர்மா ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியது.

2027 உலகக்கோப்பை தொடரில் விளையாட ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்திருக்கிறார். ஆனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரும் உலகக்கோப்பைக்கான திட்டத்தில் ரோகித் சர்மா இல்லை என்று கூறி இருக்கின்றனர். இங்கிலாந்து ஒருநாள் தொடருக்கு பின் உங்களை ஒருநாள் அணியில் சேர்க்க முடியாது என்றும் கூறிவிட்டனர்.
அதேபோல் ரோகித் சர்மாவும் தன்னுடைய முடிவை தெளிவாக கூறி இருக்கிறார். இப்படியான சூழலில், லார்ட்ஸ் ஒருநாள் போட்டியே ரோகித் சர்மா கடைசியாக ஆடும் கிரிக்கெட் போட்டி என்று அவரின் நண்பர் ஒருவரால் பதிவிடப்பட்டது. இதனால் ரோகித் சர்மாவை ஓய்வை நோக்கி பிசிசிஐ தள்ளுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
இது பிசிசிஐ மீது மறைமுகமாக அழுத்தத்தை உருவாக்கியது. இந்திய அணியில் மாற்றம் இயற்கையாக அல்லாமல் செயற்கையாக நடப்பதாக ரசிகர்கள் கம்பீரை குற்றம்சாட்ட தொடங்கினர். இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கு லார்ட்ஸ் ஒருநாள் போட்டியே கடைசி கிரிக்கெட் போட்டி என்பது வதந்தி தான். ரோகித் சர்மாவின் ஓய்வு குறித்து எந்தவித ஆலோசனைகளும் நடக்கவில்க்லை என்று பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.
இதனால் ரோகித் சர்மா தனது நண்பரை வைத்து பிஆர் ஸ்டண்ட் செய்தாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ரோகித் சர்மா அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் நிலையில், திடீரென ஓய்வு முடிவை நோக்கி அவரை பிசிசிஐ தள்ளுவதாக வெளியாகிய தகவல், அவருக்கான ஆதரவு அதிகரிக்க காரணம் ஆகியது. இதனால் ரோகித் சர்மாவை ரசிகர்களின் ஒரு தரப்பினர் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

