International
oi-Vigneshkumar
பாங்காக்: தாய்லாந்தின் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான பட்டாயாவில், அமெரிக்க கடற்படையின் மிக பெரிய விமானம் தாங்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் வரவுள்ளது. இதற்கிடையே அங்கு பாலியல் தொழிலில் ஈடுபட்டோருக்கு எதிராக அந்நாட்டு அதிகாரிகள் கடும் நடவடிக்கையை எடுத்துள்ளனர். இதனால் பட்டாயா நகரமே பரபரப்பில் இருக்கிறது.
மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் போரில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பல் முக்கிய பங்கு வகித்தது. இதனால் திட்டமிடப்பட்ட நாட்களை காட்டிலும் கப்பல் அதிக காலம் பணியில் இருக்க வேண்டி இருந்தது. இந்த நீண்ட கால கடற்பயணத்துக்கு பிறகு தனது வீரர்களுக்கு ஓய்வு வழங்க அமெரிக்கா திட்டமிட்டது.

அமெரிக்க கடற்படை
சுமார் 250 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கடலில் பயணித்து வரும் அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் வரும் செப்டம்பர் 2 முதல் 6ஆம் தேதி வரை பட்டாயா அருகே உள்ள துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது. அதில் இருக்கும் சுமார் 5,000 அமெரிக்க கடற்படை வீரர்கள், கடற்படையினர் மற்றும் விமானிகள் பட்டாயா பகுதிக்கு வர உள்ளனர்.
தாய்லாந்தில் பாலியல் தொழில் சட்டவிரோதமானதாக இருந்தாலும், பட்டாயா போன்ற சுற்றுலா நகரங்களில் பாலியல் தொழில் பரவலாக காணப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்க வீரர்களின் வருகையை முன்னிட்டு நகரம் முழுவதும் போலீசார் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர். நேற்று ஆகஸ்ட் 31ஆம் தேதி முதலே பாதுகாப்பிற்கு கூடுதலாக போலீசார் களமிறக்கப்பட்டனர்.
கட்டுப்பாடு
அமெரிக்க வீரர்கள் அங்கு ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம் என்றாலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக போதைப்பொருள் மற்றும் சில நீர்விளையாட்டுகளில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பட்டாயாவின் பிரபலமான இரவு நேர பொழுதுபோக்கு பகுதியான வாங்கிங் ஸ்ட்ரீட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டாலும், அதிகாலை 2 மணிக்கு பிறகு இரவு நேர கேளிக்கை இடங்களில் இருக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாலியல் தொழில்
மேலும், தாய்லாந்து அதிகாரிகளும் பட்டாயாவில் பிஸ்னஸ் நடத்துவோருக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அமெரிக்க வீரர்களுக்கு எந்தவிதமான பாலியல் சர்வீஸ்களையும் வழங்கக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், வெளிநாட்டு வீரர்களை ஏமாற்றி அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே பட்டாயாவில் பாலியல் தொழில் தொடர்பான கைது நடவடிக்கைகளும் அதிகரித்துள்ளன. அங்கு சமீபத்திய நாட்களில் மட்டும் சுமார் 75 பேர் பாலியல் தொழில் தொடர்பான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
எதிர்பார்ப்பு
இதுபோல சில கெடுபிடிகள் இருந்தாலும் கூட அமெரிக்க வீரர்கள் எப்போது வருவார்கள் என்பதை உள்ளூர் பிஸ்னஸ்மேன்கள் எதிர்நோக்கியே காத்திருக்கிறார்கள். அமெரிக்க வீரர்களின் வருகை பட்டாயாவின் பொருளாதாரத்திற்குப் புத்துயிர் அளிக்கும் என உள்ளூர் வர்த்தகர்கள் நம்புகின்றனர். ஒவ்வொரு அமெரிக்க வீரரும் பட்டாயாவில் இருக்கும் காலத்தில் கணிசமான தொகையை செலவிடுவார்கள் என்பதால் அது பொருளாதரத்திற்கு பேருதவியாக இருக்கும் என்பது அவர்கள் கருத்து!
அதேநேரம் இதுபோல அதிகளவில் ராணுவ வீரர்கள் வரும்போது எவ்வளவு கெடுபிடி விதித்தாலும் பாலியல் தொழிலாளர்களை முழுமையாக கட்டுப்படுத்த முடியாது. இதனால் பாலியல் சுரண்டல் மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்களின் அபாயம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.



