பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு அதனைச் செயல்படுத்த கொள்கை ரீதியான முடிவு எடுத்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார்
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி செயலாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மதிய உணவுத் திட்டம்
குறைந்த போசாக்கு மட்டமுள்ள மாணவர்களுள்ள மாவட்டங்களில் ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்காக செயற்படுத்தப்படும் மதிய உணவுத் திட்டத்துடன் இணைந்ததாக பாடசாலை மாணவர்களிடையே இரும்புச்சத்து குறைபாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு, மாகாண சபைகள்,உணவு மேம்பாட்டு சபை, உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டு செயலகம் என்பன இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.
மதிய உணவு வழங்கும் திட்டத்திற்கு அரசாங்கம் இந்த வருடத்தில் 32 பில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட நான்கு மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுவதோடு அதன் பெறுபேறு தொடர்பில் சுகாதார மற்றும் போசாக்குப் பிரிவு முன்னெடுக்கும் முறையான ஆய்வின் பின்னர் இதனை நாடளாவிய ரீதியில் செயற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
செறிவூட்டப்பட்ட அரிசி
இந்தத் திட்டத்தைச் செயற்படுத்துவதன் ஊடாக
பாடசாலை மாணவர்களிடையே இருப்புச் சத்துக் குறைபாடு மட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளதா என கண்டறிவது ஆய்வின் நோக்கமாகும்.

குறிப்பாக பாடசாலை மாணவர்களின் இரத்த சோகையை நீக்குவதற்காக, இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலத்துடன் தயாரிக்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசியை ( Fortified Rice ) பாடசாலை மாணவர்களின் மதிய உணவில் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு பில் மற்றும் மிலிண்டா கேட் பௌண்டேசன் மற்றும் பாத் பைண்டர் நிறுவனம் என்பன தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க உடன்பாடு தெரிவித்தன.

