தானா மேரா:
கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி பள்ளியில் சக மாணவியால் தாக்கப்பட்ட 15 வயதுப் பெண் மாணவி ஒருவரின் மூக்கு எலும்பு முறிந்ததுடன், அவரது வலது தோள்பட்டை எலும்பிலும் முறிவு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவத்தால் கடுமையான உளவியல் ரீதியான அதிர்ச்சிக்குள்ளான (Trauma) அந்த மாணவி, தற்போது வரை மனநலச் சிகிச்சை, எலும்பு சிகிச்சை மற்றும் ENT (மூக்கு, தொண்டை, காது) நிபுணர்களின் தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
பாடநெறிக்கு அப்பாற்பட்ட வெளிப்புற நடவடிக்கையின் போது சில மாணவிகள் வராதது குறித்து ஆசிரியர் கேட்ட கேள்விக்கு, இந்த மாணவி “தெரியவில்லை, ஒருவேளை கட் அடித்திருப்பார்கள் ” என்று சாதாரணமாகப் பதிலளித்துள்ளார். யாரைப் பற்றியும் புகார் அளிக்கும் நோக்கம் அவருக்கு இருக்கவில்லை.
மறுநாள் பள்ளிக்குச் சென்ற மாணவியுடன் வாக்குவாதம் செய்த சக மாணவி, அவரைப் பிடித்து இழுத்துத் தலையைப் பலகையில் (Whiteboard) மோதியுள்ளார் என்று, பாதிக்கப்பட்ட மாணவியின் 45 வயதுத் தாயார் கூறினார்.
பள்ளி ஒழுங்கு நடவடிக்கை ஆசிரியரின் தகவலின் பேரில் அங்கு சென்ற தாய், மாணவியின் மூக்கு மற்றும் வாயில் இரத்தம் வழிவதையும் கண்கள் வீங்கியிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு மூக்கு எலும்பு முறிவு மற்றும் உதட்டுப் பகுதியில் காயமடைந்து 5 தையல்கள் போடப்பட்டன. அத்தோடு வலது தோள்பட்டையில் முறிவு மற்றும் நரம்பு நசுங்கிய நிலை கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், நினைவலைகளில் இருந்து மீள்வதற்காக அந்த மாணவி கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி புதிய பள்ளிக்கு மாற்றப்பட்டார். இருப்பினும், அச்சம் காரணமாகத் தாய் அவரை வகுப்பறை வரை சென்று விட்டு வருகிறார்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு வரும் செப்டம்பர் மாதம் வரை மருத்துவ விடுப்பு (MC) அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது தாயார் சட்ட நிறுவனத்தின் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை மற்றும் இழப்பீட்டு வழக்கு தொடரவுள்ளார்.



