கோலாலம்பூர்:
காஜாங், பண்டார் மஹ்கோத்தா செராஸில் உள்ள உணவகம் ஒன்றுக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 47 வயதுடைய மலேசியப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.15 மணியளவில் நிகழ்ந்ததாகக் காஜாங் மாவட்ட போலிஸ் தலைவர் உதவி ஆணையர் நாஸ்ரோன் அப்துல் யூசோப் தெரிவித்தார்:
35 வயதுடைய மலேசிய ஆடவர் காரை ஓட்டி வந்தபோது, பிரேக்கிற்குப் பதிலாகத் தவறுதலாக ‘ஆக்சிலரேட்டரை’ அமுக்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து உணவகத்தின் உணவருந்தும் பகுதிக்குள் புகுந்தது.


உணவகத்திற்குள் புகுந்த கார் வெளியேறும் வழியை நோக்கித் திரும்பியபோது, அங்கிருந்த மலேசியப் பெண் காரை நிறுத்த முயன்று ஓடிவந்துள்ளார். அப்போது கார் அங்கிருந்த இரும்புத் தூண் மீது பலமாக மோதியதில், நிலைதடுமாறி விழுந்த இரும்புத் தூண் அப்பெண்ணின் தலையில் பலமாகத் தாக்கியது.
தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
இந்த விபத்தில் காயமடைந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அவரிடம் போதைப்பொருள் மற்றும் மதுபானப் பரிசோதனைகளுக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) (அபாயகரமான முறையில் வாகனத்தை ஓட்டி மரணத்தை விளைவித்தல்)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 முதல் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, RM50,000 வரை அபராதம் மற்றும் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.
இச்சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள போலிஸ் நிலையத்தையோ அல்லது புலனாய்வு அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமத் ரசிமானை 019-4565502 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



