Sports
oi-Yogeshwaran Moorthi
அட்லாண்டா: எகிப்து அணிக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் அர்ஜெண்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றியை பெற்ற பின், மெஸ்ஸி கண்ணீருடன் மைதானத்தில் நின்றது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்பின் மெஸ்ஸியை அந்த அணி வீரர்கள் டாஸ் அப் செய்து கொண்டாடினர். இது அர்ஜெண்டினா ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
ஃபிஃபா உலகக்கோப்பை வரலாற்றில் அர்ஜெண்டினா அணிக்கு மறக்க முடியாத வெற்றி கிடைத்துள்ளது. எகிப்து அணிக்கு எதிரான போட்டியில் அர்ஜெண்டினா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக ஃபிஃபா உலகக்கோப்பையின் காலிறுதி சுற்றுக்கு அர்ஜெண்டினா அணி முன்னேறி இருக்கிறது.

வெறும் கோல் ஸ்கோரை பார்த்தால் அர்ஜெண்டினா அணியின் வெற்றி எளிதாக தெரியும். ஆனால் அர்ஜெண்டினா அணி தனது முதல் கோலை 79வது நிமிடத்தில் தான் அடித்தது. அதற்கு முன் அர்ஜெண்டினா அணி கோல் அடிக்க எத்தனையோ வாய்ப்புகளை உருவாக்கியது. அதுவும் எதுவும் அர்ஜெண்டினா அணிக்கு சாதகமாக அமையவில்லை.
இவ்வளவு ஏன், 17வது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தும், அதனை மெஸ்ஸி கோட்டைவிட்டார். ஆனால் மறக்க முடியாத கம்பேக்கை அர்ஜெண்டினா அணி நிகழ்த்தி இருக்கிறது. வாழ்வில் எத்தனையோ வெற்றி, தோல்விகளை கண்டிருந்தாலும், இந்த வெற்றியை மெஸ்ஸியால் மறக்க முடியாது. அதற்கு ஆட்டம் முடிவடைந்த பின் மெஸ்ஸி கண்ணீருடன் நின்றதே சாட்சி.
ஒரு பக்கம் மெஸ்ஸி கண்ணீருடன் நின்றிருக்க, மறுபக்கம் பயிற்சியாளர் ஸ்கலோனி பேச முடியாமல் ஆனந்தக் கண்ணீர்விடுகிறார். மெஸ்ஸியின் கண்ணீரை பார்த்த அர்ஜெண்டினா அணி வீரர்கள் உடனடியாக அவர் பக்கம் சென்று உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் மெஸ்ஸியை டாஸ் அப் செய்து அர்ஜெண்டினா அணி வீரர்கள் கொண்டாடியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வேறு எந்த வீரருக்கு சக வீரர்களால் இப்படியொரு கொண்டாட்டம் அமையும் என்று தெரியவில்லை. மெஸ்ஸியை ஒரு அரசனை போல் அந்த அணி வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். இன்னும் 3 போட்டிகளில் வென்றால், அர்ஜெண்டினா அணி மெஸ்ஸியின் கீழ் இன்னொரு உலகக்கோப்பையையும் வெல்லும். இதனால் இன்னும் 3 போட்டியில் அர்ஜெண்டினா அணி வெல்ல வேண்டும் என்று இப்போதே பிரார்த்தனை செய்ய தொடங்கியுள்ளனர்.

