ஒருபுறம் கடுமையான போட்டி, இன்னொருபுறம் பெற்றோரின் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு, மூன்றாவதாக தாங்க முடியாத பாடச்சுமை ஆகியவற்றால் நீட் தேர்வை எழுதும் மாணவச் செல்வங்களுக்கு ஏற்படும் அழுத்தங்களையும், மன உளைச்சலையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், அதற்கான தீர்வு தற்கொலை அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதேபோல், பிள்ளைகள் மருத்துவம் படிப்பது தான் தங்களுக்குப் பெருமை என்ற மாயையிலிருந்து பெற்றோர்கள் வெளியில் வர வேண்டும். மருத்துவமும் ஒரு பட்டப்படிப்பு தான்; அதில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் அதைத் தவிர்த்த ஏராளமான படிப்புகளில் ஒன்றை படிக்க மாணவர்களும், அதை அங்கீகரிக்க பெற்றோரும் தயாராக இருக்க வேண்டும். நீட்டுக்கு இனியும் ஒரு குழந்தையைக் கூட பலி கொடுக்கக்கூடாது.

