Last Updated:
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், ரோகித் சர்மா காயம் காரணமாக இந்திய அணியை வழிநடத்தமாட்டார் என கூறப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்தமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாய் மைதானத்தில் நடந்து வருகின்றது. குரூப் ஏ-வில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் குரூப் பி-யில் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மேலும் தென்னாபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுக்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாளை (மார்ச் 2)ஆம் தேதி நடைபெறும் போட்டியில், இந்தியா – நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதுகின்றன. ஆனால் இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடமாட்டார் என கூறப்படுகிறது. பாகிஸ்தான் அணியுடனான லீக் போட்டியில், பீல்டிங் செய்யும்போது, ரோகித் சர்மா அசௌகரியமாக உணர்ந்தார். அவருக்கு தொடை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நியூசிலாந்து அணியுடனான போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவது சந்தேகமடைந்துள்ளது.
ஆகையால், நாளை நடைபெறும் போட்டியில், இந்திய அணியின் துணை கேப்டன் ஷுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார் என கூறப்பட்டுள்ளது. ஷுப்மன் கில் இதுவரை ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தியதில்லை. இருப்பினும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரின் போது கில் முதன்முறையாக டி20 போட்டியில் இந்திய அணியை வழிநடத்தினார். அந்தத் தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது.
சிறப்பான ஆட்டத்தால், தற்போது நம்பர் 1 பேட்ஸ்மேனாக இருக்கும் ஷுப்மன் கில், 2025ஆம் ஆண்டில் இதுவரை விளையாடியுள்ள 5 ஒருநாள் போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் உட்பட 406 ரன்கள் குவித்துள்ளார். குறிப்பாக வங்கதேசத்துடனான போட்டியில் அதிரடியாக சதமும், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், வெற்றிக்கு உதவும் வகையில் 46 ரன்களும் விளாசினார்.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் போட்டி மழையால் ரத்து… அரையிறுதியில் யாருக்கு வாய்ப்பு?
சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இந்திய வீரர்களின் பட்டியலை அஜித் அகர்கர் அறிவிக்கும்போது, துணை கேப்டனாக ஷுப்மன் கில் அறிவிக்கப்பட்டபோது, அனைவரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். ஆனால் அவரது சிறந்த ஃபார்மால் அனைவருக்கும் பதிலளித்தார். தற்போது கேப்டனாக ஷுப்மன் கில் எப்படி செயல்படப்போகிறார் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
March 01, 2025 11:33 AM IST


